சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் பிளாஸ்மா வங்கி.. விரைவில் திறப்பு.. விறுவிறு நடவடிக்கை!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கொரோனா சிகிச்சைக்கான பிளாஸ்மா வங்கி விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதன் முறையாக கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வங்கி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டது. கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களில் விருப்பம் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்மா வங்கி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக புதிய லீனியர் அக்சிலிரேட்டர் என்ற ரூ. 25 கோடி விலையிலான கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று அமைச்சர் விஜய பாஸ்கர், அமைச்சர் வேலுமணியுடன் இணைந்து பார்வையிட்டார். இதையடுத்து, இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்
இதையடுத்து, பேட்டி அளித்த விஜய பாஸ்கர், ''கோயம்புத்தூரில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ. 75 கோடி செலவிலான ஆக்சிஜனேற்ற இயந்திரம் விரைவில் அமைக்கப்படும். மேலும், கோயம்புத்தூரில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். முதல்வரிடம் வேலுமணி கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை தமிழ்நாட்டில் வெற்றி... பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கோயம்புத்தூரில் கொரோனா நோயாளிகளை சமாளிக்க கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயாளிகளுக்கு என்று 4,680 படுக்கைகள் உள்ளன. தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்த படியாக கோயமுத்தூரில்தான் கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 20ஆம் தேதி வரை 1,00,069 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது. தினமும் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனையில் மட்டும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக புதிய லீனியர் அக்சிலிரேட்டர் என்ற ரூ. 25 கோடி விலையிலான கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரைக்கும் 21 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த முறையில் சிகிச்சை அளிக்க ரூ. 2.5 லட்சம் செலவாகும். ஆனால், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார்.