உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...கோவையில் மோடி சொன்ன திருக்குறளின் அர்த்தம் இதுதான்
விவசாயிகளின் பெருமையை போற்றும் வகையில் கோவையில் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.... என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி.
கோவை: விவசாயிகளே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அவர்களை தொழுது வணங்கி பின் செல்பவர்கள் என்று பிரதமர் மோடி விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசும் போது இதனை தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அரசு விழாவில் பங்கேற்க கோவை வந்துள்ளார். கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கோவையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பங்கேற்ற அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து மோடி வைத்தார். திருப்பூர் வீரபாண்டியில் 1,280, திருக்குமரன் நகரில் 1,248, திருச்சி இருங்களூர், மதுரை ராஜாங்கோரில் தலா 1088 குடியிருப்புகள் இத்திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். தமிழகத்தில் 9 ஸ்மார்ட் சிட்டிகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். அதோடு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கோவை சேலம் உள்பட 9 நகரங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
தமிழில் வணக்கம் கூறி பேசத் தொடங்கிய மோடி தொழில் நகரமான கோவைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி, உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டும் என்று சொன்னார்.
புதுவையில் தற்போதுதான் சுதந்திர காற்று வீசுகிறது... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி!
விழாவில் விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் சொன்ன மோடி, வ.உ.சி துறைமுகத்தை விரிவு படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களினால் ஒட்டுமொத்த தமிழகமும் பயன்பெறும் என்றும் கூறினார். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.