17 பேரை விழுங்கிய கருங்கல் சுற்றுச் சுவர்.. வீட்டு உரிமையாளர் மீது வழக்கு
Recommended Video
கோவை: கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகள் விழுந்து 17 பேர் பலியான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்த நிலையில் வீட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.
இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
பலியானோரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணமாக கருங்கல் சுற்றுச்சுவரை கட்டிய வீட்டு உரிமையாளருக்கு எதிராக கொலை வழக்கும் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்ய கோரி மக்கள் மறியல் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.