முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஏற்றிய காவலர் நேசமணி.. கைது
கோவை: காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்த ஆத்திரத்தில் அப்பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சென்னையைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். முகநூலில் அடிக்கடி உலாவும் அவருக்கு சென்னை ராமாபுரத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றும் நேசமணி என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார்.
தற்போது 31 வயதாகும் நேசமணியும் 27 வயதான அந்த பெண்ணும் முகநூலில் பேசத் தொடங்கி தொடர்ந்து செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.. அடிக்கடி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், செல்போன் பேச்சு என தொடர்ந்து இரவு பகலாக பேசி வர, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
சுமார் நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் அடிக்கடி பொள்ளாச்சி வந்த நேசமணி அப்பெண்ணுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்து உள்ளார். அப்போது நேசமணி தனது செல்போனில் அந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு கடந்த மாதம் வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த போலீஸ்காரர் நேசமணி அந்தப் பெண் மீது ஆத்திரம் கொண்டு உள்ளார். தொடர்ந்து அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட நேசமணி தன்னை ஏமாற்றியதால் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். அல்லது புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தன்னுடன் மீண்டும் பேச வேண்டும் எனவும், தன்னை தனிமையில் சந்திக்க வேண்டுமென கூறியதாக கூறப்படுகிறது..
இதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவரது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேசமணி அந்தப் பெண்ணுடன் தான் எடுத்த புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் நேசமணி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்தனர்
தொடர்ந்து சென்னை விரைந்த போலீசார் காவலர் நேசமணியை கைது செய்தனர். விசாரணையில் தான் அந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததை நேசமணி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் நேசமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிறையில் அடைத்தனர்.