சாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை!
காணாமல் போன 4 வயது சாமினியை கண்டுபிடிக்க போலீசார் முயன்று வருகிறார்கள்
கோவை: சாமினி பாப்பாவுக்கு என்ன ஆச்சு.. எங்கே போனாள்.. என்ற கேள்வி தமிழக மக்களை வாட்டி வருகிறது. இது சம்பந்தமாக போஸ்டர் அடித்து மாயமான குழந்தையை தேடி கொண்டிருக்கிறார்கள் போலீசார்!
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார் - கவிதா. இவர்கள் விசைத்தறி கூலி தொழிலாளர்கள். இவர்களின் 2-வது குழந்தைதான் சாமினி. 4 வயது குழந்தை இவள்.
போன 5-ம் தேதி வீட்டுக்கு பக்கத்தில், மற்ற பிள்ளைகளோடு தெருவில் விளையாடி கொண்டிருந்தவள், வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் சாமினி கிடைக்கவே இல்லை. அதனால் சூலூர் போலீசில் புகார் தந்தனர்.
மற்றொரு பக்கம் தினந்தோறும் சாமினிக்கு என்ன ஆச்சோ என்று ஒவ்வொரு பகுதியாக தேடி வருகின்றனர். கிணறு, குட்டை, ஏரி, புதர்களில் இந்த பெற்றோர் பதறியடித்து கொண்டு பார்க்கும்போது நெஞ்சம் கனத்து போகிறது. இன்றுடன் குழந்தை காணாமல் போய் ஒரு வாரம் ஆகிறது. அவளை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இன்று குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் ஆபீசில் கிராமவாசிகள் மனு அளித்துள்ளனர். இப்படித்தான் போன வருடம் ஹரிணி பாப்பா காணாமல் போய், பொது மக்களின் ஒத்துழைப்புடன் திரும்ப கிடைத்து விட்டாள். அதுபோலவே இந்த முறையும் சாமினியை தேடும் முயற்சியில் மக்கள் உதவ முன் வரமாட்டார்களா என்ற ஏக்கம் தலைதூக்க தொடங்கி உள்ளது.
குழந்தை காணாமல் போன விஷயத்தில் போலீசாருக்கு எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால்,போஸ்டர் ஒட்டி பாப்பாவை தேடி வருகிறார்கள். இன்று தமிழகம் முழுக்க ஒலிக்கும் கேள்வி "சாமினிக்கு என்ன ஆச்சு?" என்பதே!