கோடநாடு கொலை வழக்கு... அதிமுக மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 7 மணிநேரம் விசாரணை... பரபரப்பு தகவல்கள்
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் போலீசார் 7 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
அதாவது ஓம் பஹதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா காயமடைந்தார். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
கோடநாடு எஸ்டேட் வழக்கு: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரம் திரட்டுவதில் தொய்வா? என்ன பின்னணி?

மர்ம முடிச்சுகள்
இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார். இதனால் இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்கிறது. இதனால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிர விசாரணை
இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரை நடத்தியுள்ளனர். 40க்கும் அதிகமானவர்களிடம் மேல் விசாரணை நடந்து முடிந்துள்ளது. கோடநாடு மேலாளர் நடராஜ் , மின் உதவிபொறியாளர் மற்றும் தடயவியல் நிபுணர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை.

முன்னாள் எம்எல்ஏவிடம்...
இதனால் விசாரணையை தீவிரப்படுத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் இன்று கோவை பிஆர்எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உறுதி செய்தார்.

7 மணிநேர விசாரணை
இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று விசாரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெயலலிதாவின் கார் டிரைவரும், விபத்தில் இறந்தவருமான கனகராஜ் இதற்கு முன்பு ஆறுக்குட்டியிடம் பணியாற்றினார். வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் தான் ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று 7 மணிநேரம் போலீசார் ஆறுகுட்டியிடம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின்போது கனகராஜ் உள்பட பல்வேறு நபர்கள் குறித்தும் போலீசார் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு சசிகலாவின் உறவினரான விவேக்கிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.