ஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி!
கோவையில் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தற்போது போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கோயம்புத்தூர்: கோவையில் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தற்போது போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக சிறப்பு போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கோயம்புத்தூரில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக போலீசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
என்ன சொன்னார்கள்
அதன்படி லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இலங்கை சென்று அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு ரகசியமாக நுழைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
என்ன ஆபரேஷன்
இதனால் தற்போது தமிழக போலீசார் ஸ்டாஃர்மிங் ஆபரேஷனை முடுக்கிவிட்டுள்ளனர். பொதுவாக ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் பெரும் திட்டமிடுதலுக்கு பின்பே நடத்தப்படும். அதே சமயம் ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் மூலம் உடனடியாக பலன் கிடைக்கும். சென்னையில் கடந்த வருடம் நடந்த திடீர் ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் மூலம் ஒரே நாளில் 800 குற்றவாளிகள் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் இறங்குவார்கள்
ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் மூலம் ஒரு போலீஸ் படையில் இருக்கும் முக்கியமான அதிகாரிகள் எல்லோரும் களமிறக்கப்படுவார்கள். மொத்தமாக சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள், கமாண்டோ படையினர் எல்லோரும் களமிறங்குவார்கள். இவர்கள் தெரு தெருவாக மாவட்டத்தை மொத்தமாக சல்லடை போட்டு தேடுவார்கள்.
என்ன உதவி
ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் நடக்கும் போது அரசின் முழு உதவி போலீசுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கப்படும். சந்தேகப்படும் யாரையும் போலீசார் கைது செய்து விசாரிக்க முடியும். கோவையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கைக்கு எதிராகத்தான் தற்போது ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது.
என்ன கைது
இதன் மூலம் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட நபர்கள் போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கோவையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
படை
அதேபோல் ஸ்டாஃர்மிங் ஆபரேஷனில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக கடலோர காவல்படை , கடற்படை ஆகிய படைகளும் களமிறங்கி உள்ளது. இவர்கள் தீவிரமாக தமிழக கடலோர பகுதிகளில் சோதனை செய்து வருகிறார்கள். அவசர காலத்தில் உதவுவதற்காக தற்போது விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.