பொள்ளாச்சி கொடூரம்… 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும்… மகளிர் ஆணையம் அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சி கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை தங்களது வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் கும்பல், கல்லூரி மாணவியை கொடுமைப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக, மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு திருப்பமாக, இன்று வெளியான நான்கு வீடியோக்களில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜன் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை உண்டாக்குகிறது... டிடிவி. தினகரன் பேச்சு
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக கோவை எஸ்.பி.யிடம் விசாரிக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி கொடூரம் பற்றி 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து விளக்கம் கோரி தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.