பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது - மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மூன்று பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
Recommended Video
பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பல் ஒன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அருளானந்தம் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக இருக்கிறார். கைது செய்யப்பட்ட 3 பேரும் மருத்துவபரிசோதனைக்குப் பிறகு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில், பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.