தட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்
தொண்டாமுத்தூர் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Recommended Video
கோவை: நடக்க முடியாத வயதானவர்கள்கூட கையில் கொம்பை எடுத்து, உரி அடித்தும், மிட்டாய்களை சாப்பிட்டும் பொங்கலை கொண்டாடிய நிகழ்வு கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வீட்டில் உள்ள பெரியவர்களை தேவையற்ற சுமையாக கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவது வாடிக்கையாகி விட்டது.
சில சமயங்களில், பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க கூடாது என்றும், ஆதரவற்றோர் இல்லாத நிலையிலும் தாங்களாகவே முதியவர்கள் இல்லங்களை தேடி செல்லும் சூழலும் உள்ளது. இவர்களுக்கு பண்டிகை என்பது எல்லாம் எந்த அளவுக்கு மனசுக்கு சந்தோஷத்தை முழுசாக தரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
300-க்கும் மேற்பட்டோர்
ஆனால் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அனன்யா நானா நானி என்ற முதியோர் இல்லம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம் அங்குள்ள பெரியோர்களுக்கு இழந்த மகிழ்ச்சியை பெற்று தந்தது என்று சொல்லலாம்.
இந்த இல்லத்தில் 300 க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளனர். நேற்று பொங்கல் பண்டிகை என்பதால், பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி பண்டிகையை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டு
அதன்படி, மண் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர் அந்த வளாகத்திலேயே ஒரு மிட்டாய் கடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த கடையில் பெரியவர்கள் தின்பண்டங்களை வாங்கி ருசித்தபடியே பாரம்பரிய விளையாட்டை விளையாட வந்தனர். உரியடி, கயிறு இழுத்தல் போன்றவை அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வயதானவர்கள் பங்கேற்பு
இதில் ஆண்கள், பெண்கள் என வயதானவர்கள் கலந்து கொண்டு உரி அடித்தனர். வயதானவர்கள் தட்டுதடுமாறி கையில் கம்புடன் உறி அடித்தது காண்போரை நெகிழ செய்தது.
திரும்பி பார்க்க வைத்தது
இதையடுத்து தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கோலாட்டம்,சிலம்பாட்டம்,சலங்கை
யாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதனை ஆர்வமுடன் கைதட்டி ரசித்து பார்த்தார்கள். மொத்தத்தில் முதியவர்கள் நடத்திய இந்த பொங்கல் தொண்டாமுத்தூரையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது.,