கோவை வேளாண் பல்கலை.யில் பொங்கல் கொண்டாட்டம்… புதிய பயிர் ரகங்கள் வெளியீடு
Recommended Video
கோவை:கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பொங்கல் விழாவுக்கு, 10 ஜோடி மாடுகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை, மாடுகளுக்கும் வழங்கினர். வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக் கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும்.
வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கூறினார். வேளாண்மை பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
அதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து , எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த வளம் பெருகும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மஞ்சள் பயிரை மிதித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தாண்டு விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக 14 வகை புதியபயிர் ரகங்கள் வெளியிட்டுள்ளன. இவைகள் அனைத்தும் கால நிலைக்கேற்ப விளைச்சல் தரும் என்று வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.