ஆஹா கல்யாணம்... மைக் செட் வைத்து.. மேளதாளம் முழங்க... பஞ்ச கல்யாணிகளுக்கு கல்யாணம்
கோவை: மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வழிபடும் விநோத வழிபாடு நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தை அடுத்த இலக்கோப்பாளையத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழையின்றி, விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க, முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், இரண்டு கழுதைகளை ஜோடி பார்த்து, இலக்கேப்பாளையத்தை பெண் வீடாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தில் மாப்பிள்ளை வீடாகவும் பாவித்து இந்த விநோத திருமணம் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கழுதை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர், திருமண சடங்குகள் செய்து திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். பின்னர் மேளதாளம் முழங்க கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.
நிஜ கல்யாணம் போலவே தாலி கட்டி மொய் வைக்கப்பட்டது. இந்த கல்யான வைபவத்தில் கிராம மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மழை வேண்டி வழிபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் பேசுகையில், தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
கடந்த 1984ஆம் ஆண்டு இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் தண்ணீருக்கு அவதிபட்டனர். அப்போது ஊர் பெரியவர்கள் சார்பில் நடத்தபட்ட கல்யாணி திருமணத்தால் மழை வந்து பஞ்சம் தீர்ந்தது. எனவே, இதுபோன்ற வைபவம் நடத்தபட்டதால் மீண்டும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த கல்யாணம் அவசரமாக நடைபெற்றதாக தெரிவித்தனர்.