பாஜக ரூட் ரொம்ப க்ளியர்.. கோவையில் மோடி பேச்சை கவனித்தீர்களா.. முதல் பிரச்சாரத்திலே 'டாப் கியர்'
கோவை: கோவை கொடிசியா மைதானத்தில், இன்று தமிழக தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
அவர் தனது உரையின் ஆரம்பத்தில், "வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர்," என்று தமிழில் கூறினார். இதில் ஆச்சரியமில்லை. எந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்தாலும், அந்த மாநில மொழியில் உரையை ஆரம்பிப்பார் மோடி.
மோடி, தான் பிரச்சாரம் செய்யும் ஊரை புகழ்ந்து பேசுவதும் வாடிக்கை. ஆனால், கோவையில், மோடி கூறிய அடுத்த தமிழ் வார்த்தை முக்கியமானது. அனைத்து கட்சிகளாலும் உற்று கவனிக்கத் தக்கதாக அமைந்த வார்த்தை.
வெற்றி வேல் வீர வேல் என்று முழங்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி
வெற்றிவேல் வீரவேல்
அப்படி என்ன சொன்னார் என்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட இரு வார்த்தைகளைத் தொடர்ந்து, "வெற்றிவேல் வீரவேல்" என்று மோடி உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார். முந்தைய எந்த கூட்டத்திலும் மோடி வெற்றிவேல் வீரவேல் என முருகனை துணைக்கு அழைத்ததாக நினைவு இல்லை என்கிறார்கள், சீனியர் பத்திரிக்கையாளர்கள். இப்போது ஏன் மோடி, முருகனை துணைக்கு அழைக்கிறார்?
யூடியூப் சேனல்
இது ஒரு நாளில் கூறப்பட்ட தேர்தல் வார்த்தை இல்லை. பல மாதங்களாக வார்த்து எடுக்கப்பட்ட வார்த்தை. ஆம்.. யூடியூப் சேனல் ஒன்றில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துக்களை சிலர் பேச, அவர்களுக்கு எதிராக கிளர்த்து எழுந்தது பாஜக. அந்த சேனல் பின்னணியில் திமுக இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியது பாஜக. இப்போது அந்த சேனல் முடக்கப்பட்டு, கந்த சஷ்டி பற்றி சர்ச்சையாக பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
வேல் யாத்திரை
பாஜக அத்தோடு விடவில்லை. அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை செய்தார், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன். அப்போது இந்துக்களுக்கு ஆதரவான கட்சி பாஜக என்றும், திமுக எதிரான கட்சி என்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஸ்டாலின் கையில் வேல்
பாஜகவின் இந்த பிரச்சாரத்தை சும்மா கடந்து விட முடியாது. திமுகவில் அதன் அதிர்வுகளை பார்க்க முடிந்தது. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி கிடையாது என்று அக்கட்சி தலைவர்கள் பலரும் தெரிவித்தனர். அவ்வளவு ஏன்.. திருத்தணி திமுக கூட்டத்தில், ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் வேல் கொடுத்து கவுரவப்படுத்த அந்த போட்டோ வைரலானது.
முதல் முறை
இப்படியாக, தமிழக அரசியலும், வேலும் கடந்த சில மாதங்களாக இணை பிரியாமல் பயணித்து வருகிறது. இப்படி ஒரு பின்னணியில்தான் மோடி முதல் முறையாக, "வெற்றிவேல் வீர வேல்" என்று கூறி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம், பாஜக தேர்தல் பிரச்சார வியூகம், இந்து மத வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் இருக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞை கோவையிலிருந்து வெளியாகியுள்ளது.
இந்துத்துவா பிரச்சாரம்
சேலத்தில் சமீபத்தில் பேசிய, பாஜக இளைஞரணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யா, தமிழ் வாழ வேண்டும் என்றால் இந்துத்துவா வெல்ல வேண்டும் என்றார். மோடியும், இந்து மத கடவுளின், பக்தி கோஷத்தை முன் வைத்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், சிறுபான்மையினர் வாக்குகளை பற்றி பாஜக கவலைப்படவில்லை. இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பது பாஜகவின் அடிப்படை நோக்கம் எனத் தெரிகிறது. ஆனால், மதசார்பற்ற கட்சியாக முன்னிறுத்தி வரும் அதிமுக வாக்கு வங்கியை இது பலப்படுத்தப்போகிறதா, பலவீனப்படுத்தப்போகிறதா என்பதை இந்த தேர்தல் காலம் தெரிவிக்கும்.