பெல்ட்டால் அடித்தார்.. நைட்டியுடன் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.. போலீஸில் பேராசிரியை புகார்
கணவன் மீது பேராசிரியை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
கோவை: "தெரியாத்தனமா, சின்ன வயசு லவ்-வை புருஷன் கிட்ட சொல்லிட்டேன்.. அதுக்காக என்னை பெல்ட்டாலயே அடித்து, நைட்டியுடன் வெளியேறி வந்துவிட்டேன்" என்று கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பேராசிரியை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை இடையர்பாளையம் அன்புநகரை சேர்ந்தவர் சார்லஸ். இவர் சவுமியா என்பவரை காதலித்தார். சவுமியா ஒரு கல்லூரி பேராசிரியை. வயசு 32 ஆகிறது.
பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு என்பதால், வீட்டை விட்டு ஓடிப்போய், சார்லஸை கல்யாணம் செய்து கொண்டார். சார்லசின் பெற்றோர் இருவருக்கும் கடந்த மே மாசம் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், துடியலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு சவுமியா ஒரு மனுவுடன் வந்திருந்தார். அதில் அவர் சொல்லி உள்ள சுருக்கம் இதுதான்:
தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். நானும், சார்லசும் கல்யாணம் ஆகி ஒருவாரம்தான் சந்தோஷமாக இருந்தோம். அப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து சார்லஸ் கேட்கவும், நானும் எதார்த்தமாக சிறுவயதில் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்தது குறித்து சொன்னேன். இதை சாதாரணமாக எடுத்து கொள்வார் என்று பார்த்தால், சந்தேகப்பட்டு பெல்ட்டால் அடித்து விட்டார்.
மேலும், கல்யாண ரிசப்ஷன் செலவு 1 லட்சத்தை வீட்டிலிருந்து வாங்கி வருமாறு என்னை அடித்து துன்புறுத்தினார். அதனால் சம்பவத்தன்று நைட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருத்தரோட போன் வாங்கி என் பெற்றோரிடம் சொல்லி அழவும், அவர்கள் என்னை வீட்டுக்கு வருமாறு சொன்னார்கள்.
இப்போது அவர்களுடன்தான் வசித்து வருகிறேன். என்னை தாக்கி பணம் கேட்ட கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் இந்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.