கோவை பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு.. கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர் அமைப்பினர்.. தள்ளுமுள்ளு
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கோவையில் போராட்டம் நடைபெற்றது
Recommended Video
கோவை: கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டேண்டில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. "புதிய வரைவு கொள்கை இப்போ எதுக்கு? இதனால ஒரு முன்னேற்றமும் ஏற்பட போறது கிடையாது" என்று சொல்லி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது!
புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கருத்தை ஜுன் மாதம் 30 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற கால அவகாசத்தை வழங்கியுள்ளது. ஆனால் இந்த கல்விக்கொள்கைக்கு நிறைய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டேண்டில் புரட்சிகர மாணவர்-இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி காலை 11.30 மணிக்கு பெருமளவு நபர்கள் திரண்டு விட்டனர். தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர்.
அந்த சமயத்தில் கல்விக்கொள்கையின் வரைவு நகலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, ஆவேசமடைந்த அவர்கள், "புதிய வரைவு கொள்கை இப்போ எதுக்கு? இதனால ஒரு முன்னேற்றமும் ஏற்பட போறது கிடையாது. இப்ப இருக்கிற 2 மொழி கொள்கையே போதும்" என்றனர்.
தொடர்ந்து நகலையும் எரிக்க முயன்றபோது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.