எங்கே அவர்.. போன் பண்ணா எடுக்கலையே.. பணத்தை தர சொல்லுங்க.. சிட் பண்ட் ஓனரை கண்டித்து மறியல்
நிதி நிறுவன மோசடியால் ஏமாந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்
Recommended Video
கோவை: "எங்கே அவர்.. போன் பண்ணா எடுக்கவே இல்லை.. சோறு தண்ணி இல்லாம உட்கார்ந்து இருக்கோம்.." என்று சிட்பண்டில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் கொதித்து போய் மறியலில் ஈடுபட்டனர்.
கோவை 100 அடி சாலையில் உள்ளது தோட்டத்தில் சிட்பண்ட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பயனாளிகள் பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு பயனாளியும் கட்டிய பணத்தில் பாதியை மட்டுமே கணக்காக பதிவு செய்து மீதி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிட் பண்ட்
இதனால் தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தரக் கோரி பல மாதங்களாகவே பயனாளிகள் கேட்டு வந்தனர். ஆனால் பணத்தை தருவதாக சொல்லி கொண்டே வந்த சிட் பண்ட் நிறுவனம் இதுவரைக்கும் யாருக்குமே பணத்தை தரவில்லை என தெரிகிறது.
திரண்ட மக்கள்
இதுகுறித்து கோவை பி3 ஸ்டேஷனில் புகார் அளித்தும் பயன் இல்லை என்றும் சொல்லப்படுகிறது அதனால் சிட் பண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து விட்டனர்.
ஆவேசம்
இதுவரைக்கும் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக சொல்லி, கோவை 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து காந்திபுரம் போலீசாரும் வந்துவிட்டனர். அப்போது "போன் பண்ணாலும் எடுக்கல.. நாங்க சாப்பாடு தண்ணி இல்லாம இங்க காத்து கிடக்கிறோம்.. எங்கே அவரு.. உடனடி நடவடிக்கை எடுங்க.. எங்க பணத்தை திருப்பி தர சொல்லுங்க" என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமாக பேசினர்.
கடைகள்
அவர்களிடம் சமரசம் பேசிய போலீசார், பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொன்ன பிறகே மக்கள் கலைந்து சென்றனர். இந்த சிட் பண்ட் ஓனர், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநில தலைவராம்... அது மட்டுமில்லை.. முத்துவிலாஸ் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் கோயம்புத்தூர்ல மட்டும் 10 கடைகளை இருக்கிறதாம்!