சசிகலா ஜெயில்ல இருந்து வந்ததும் அரசியலுக்கு வரமாட்டார்.. நேரா வீட்டுக்குத்தான் போவார்.. புகழேந்தி
கோவை: டி.டி.வி தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்து வருவதாகவும், அவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு வருவதாகவும் அ.ம.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளரும், அ.தி.மு.க நிர்வாகியுமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை சவுரிபாளையம் பகுதியில் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்டாக உள்ளது. தமிழக முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கட்சி என்ற பெயரில் டி.டி.வி தினகரன் செய்த காமெடிக்கு அளவே இல்லை. சின்னம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். ஆர்.கே. நகரில் வழங்கிய 20 ரூபாய் டோக்கன் வழங்கியதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பெயரை சொல்லி ஓட்டு வாங்க முடியாது. நடிகர் ரஜினி புரிந்து பேசுவதாக தெரியவில்லை. மக்கள் ரஜினியை வரவேற்பது சந்தோஷமாக இருக்கிறது என்று அவரிடமே கூறினேன்.
பிரச்சினை
ஆனால், அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எழுச்சி புரட்சி ஏற்படட்டும் என்கிறார். 1965ல் மொழிக்காக உயிரை விட்ட போராட்டம் தமிழகத்தில் தான் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்காக ரஷ்யா , ஆஸ்திரேலிய சீனா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்தது. ஆனால் மொழிக்காக ஒரு போராட்டம் இங்கு தான் நடந்தது. இப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இது தான் எழுச்சி,புரட்சி.
தேர்தல் முடிந்தவுடன் பதவி இல்லை
ரஜினி எந்த எழுச்சியை கூறுகிறார் என்பது தெரியவில்லை. கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிறார். இரண்டும் வேறு வேறு இல்லை. நகமும் சதையும் போல கண்ணின் இமை போல இருப்பது தான் ஆட்சியும், கட்சியும். ரஜினி தெரிந்து தான் பேசுகிறாரா? கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் தான் கட்சி வேலை செய்ய முடியும். ஆனால், தேர்தல் முடிந்ததும் கட்சி பதவியில் இருந்து தூக்கி எறிவேன் என்கிறார்.
திராவிட கட்சி
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்கிறார். ஏதாவது நலத்திட்டங்கள் மக்களுக்கு சேரவில்லையா? எதாவது தடைபட்டிருந்தால் வெற்றிடம் எனலாம். 18 ஆண்டுகள் போராடிய அண்ணா, உருவாக்கிய ஆட்சி திராவிட ஆட்சி. சர்வ சாதாரணமாக முதலமைச்சர் ஆவேன் என்பதெல்லாம் இங்கு நடக்காது. மக்களை தெருக்களில் சந்தித்திருக்க வேண்டும். அரசியல் அடித்தளம் இல்லாமல் யாரும் பேசக்கூடாது.
வரவேற்பு
அரசியலுக்கு பல ஆண்டு காலம் உழைக்க வேண்டும். திடீரென வந்து முதலமைச்சர் ஆவேன் என்றால் சிரிப்பார்கள். அ.ம.மு.க.,வில்.இருந்து வெளியேறி, அ.தி.மு.க.,வில் இணைந்த பின்னர் இதுவரை அதிமுகவில் பதவி கேட்கவில்லை. பொறுப்பு நிச்சயம் கொடுப்பார்கள். எந்த பொறுப்பு கொடுத்தாலும் வரவேற்பேன்.
வீட்டுக்கு போவார்
சசிகலா சிறையில் இருந்து வந்தால் எந்த மாற்றமும் நடக்காது. டி.டி.வி. தினகரன் சசிகலாவை பிளாக் மெயில் செய்கிறார். சிறையில் சசிகலாவை யாரையும் சந்திக்க விடுவதில்லை. டி.டி.வி.தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தை கொள்ளையடிக்க டிராமா செய்து வருகிறார். சிறையில் இருந்து வெளி வரும் சசிகலா அரசியலுக்கு வரமாட்டார். நேராக வீட்டுக்கு போவார்.
சொத்துகள்
அவர்கள் ஒருவருக்கு கூட சசிகலாவை வெளியே அழைத்துவர எண்ணமில்லை. டி.டி.வி தினகரன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் ஊடகங்கள் கட்சியின் உழைப்பால் கிடைத்தது. அவற்றை கைப்பற்ற வேண்டும் என்பது எனது ஆசை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும். அந்த சொத்துக்கள் மக்களுக்கு தான் போய் சேர வேண்டும். அதனை வேறு யாரும் அனுபவிக்க விட மாட்டேன். அதற்கு இந்த அரசு அதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
நல்லது
தமிழக அரசியலில் டி.டி.வி தினகரன் ஒரு கொரோனா வைரஸ். அவருடன் எந்த கட்சியும் கூட்டணியும் அமைக்காது. தினகரன் ரூ.20 ஆயிரம் கோடி வைத்திருக்கிறார். கஜா புயலின் போது தனது சொந்த மாவட்டமான தஞ்சை மக்களுக்கு குறைந்தது 500 வீடுகள் கட்டி கொடுத்திருக்கலாம். மக்களுக்காக எந்த ஒரு நல்லதையும் செய்யாத கூட்டம் அது என்று தெரிவித்தார் புகழேந்தி.