கொரோனாவை கெத்தாக டீல் செய்யும் கோவை மக்கள்.. தனிமை வார்டில் செம குத்து டான்ஸ்
கோவை: கொரோனாவை உலகமே அஞ்சிப்போய் பார்க்கிறது.. நம்ம மக்கள், அதுவும் தமிழக மக்கள், அசால்ட்டாக கையாண்டு அசத்துகிறார்கள். மத்திய அரசு கூறியதை உண்மையிலேயே சீரியசாக எடுத்துக் கொண்டு, கொரோனாவோடு வாழப் பழகிவிட்டனர் என்று சொல்லலாம்.
Recommended Video
நோய் வந்துவிட்டால் அவ்வளவுதானோ என்று அச்சப்பட தேவையில்லை. அடுத்து அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதும். சோர்ந்து போய் உட்கார்ந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதில், நமது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இப்படித்தான், கோவை மக்களும் கொரோனாவை டீல் செய்கிறார்கள். எப்படி என்கிறீர்களா. பாருங்கள்.
மெரினா பாணியில் தன்னெழுச்சியாக வந்த இளைஞர்கள்.. உடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சரி செய்து புரட்சி
கொடிசியா வளாகம்
கோவை கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தங்களது மன அழுத்தத்தைப் போக்கி கொள்ள குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிகிச்சை மையம்
அறிகுறி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியா வளாகத்தில் உள்ள இரண்டு அரங்குகள் பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
500 பேர்
இங்கு சளி,காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாமல் தொற்று பாதித்த சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பிரிந்து இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்க அகண்ட திரைகளில் புதிய திரைப்படங்கள் மற்றும் திரை இசைப் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
விசில்
அந்த வகையில் நேற்று மதியம் கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க திரைப்படப்பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனால் உற்சாகம் அடைந்த கொரோனா நோயாளிகள் ஒன்றுகூடி திரைப்படப் பாடல்களுக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்டனர். இதனை சக நோயாளிகள் கைத்தட்டியும் விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.