ஒரு கை பார்க்க கோவை வந்தார் ராகுல் காந்தி - 3 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த ராகுல்காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்துள்ள ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய வேகத்தோடு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார் ராகுல்காந்தி. ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் மகிழ்ச்சியோடு வருவதாக கூறிய ராகுல்காந்தி, தமிழ்மொழி, தமிழக கலாச்சாரத்தை இரண்டாம் நிலையாக பிரதமர் மோடி கருதுவதாக குற்றம் சாட்டினார்.
Recommended Video
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல்காந்தி எம்.பி. களமிறங்கி உள்ளார். பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரம் வந்த அவர் அங்கு நடந்த ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார். அடுத்தகட்டமாக கொங்கு மண்டல வாக்குகளை குறிவைத்து கோவை வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த ராகுல்காந்திக்கு சித்ரா-காளப்பட்டி சாலையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சித்ரா பகுதியில் திறந்த வேனில் இருந்தவாறு ராகுல்காந்தி தனது
பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதை எதிர்த்து நாம் போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.
மோடி தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ மதிப்பதில்லை. தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பிரதமர் மோடி கருதுகிறார். இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், வாழ்க்கைமுறை உள்ளது என்பதை நாம் நம்புகிறோம். இந்தியாவின் அமைப்பு மொழியில் எல்லா மொழிகளும் உள்ளது. அதை நாம் சமமாக கருதுகிறோம்.நமக்கும் மோடிக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது. மோடி அவரின் நண்பர்களுக்காக இருக்கிறார். மோடி இந்திய , தமிழக மக்களுக்கு
சொந்தமானதை விற்க முயற்சி செய்கிறார். விவசாயிகளின் உரிமையை 3 வேளாண் சட்டங்கள் மூலம் பறிக்க நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக உள்ளது என்று கூறினார்.
இன்று மாலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செல்லும் ராகுல் காந்திக்கும் அங்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை 4.40 மணிக்கு திருப்பூர் குமரன் நினைவு இல்லத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மாலை 5.45 மணிக்கு திருப்பூரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் மண்டபத்தில் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.
நாளை 24ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாலை 4.45 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கோவையில் ஒரே நாளில் முதல்வர் பழனிச்சாமியும், ராகுல்காந்தியும் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.