காஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா?
கோவை: திரில் கதை மன்னன்.. திகில் கதைகளின் அரசன்.. எத்தனை எத்தனை பெயர்கள் இந்த "இளம்" எழுத்தாளருக்கு. எழுத வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன என்று அவர் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம்தான் மிதமிஞ்சி நிற்கிறது.
முதல் எழுத்து எப்படி இருந்ததோ அதே வீரியம், அதே சுவை, அதே விறுவிறுப்பு இப்போது வரை தொடர்வதுதான் ராஜேஷ்குமார் என்ற சாம்ராஜ்ஜியத்தின் பலம்.
1500க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி முடித்துள்ள ராஜேஷ்குமார் இன்று வரை அதே சுறுசுறுப்புடன் தனது எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்து வருவது இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியாகும்.
கையெழுத்து
கம்ப்யூட்டரை எடுத்தோமா.. டக்டக்கென டைப் செய்தோமா அனுப்பினோமா என்று பலரும் மாறிப் போயுள்ள காலம் இது. ஆனால் இன்று வரை தனது கைப்படத்தான் கதைகளை எழுதி அனுப்பி வருகிறார் ராஜேஷ்குமார். கூடவே டிசைனும் செய்து அவர் அனுப்பும்போது பார்க்கவே அத்தனை ஆச்சரியமாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும்.
முத்து முத்தான கையெழுத்து
அவரது கையெழுத்து அத்தனை அழகு.. முத்து முத்தாக. கம்ப்யூட்டர்கள் வந்தது முதல் எழுதும் பழக்கமே நம்மில் பலருக்குப் போய் விட்டது. அப்படி இருக்கக் கூடாது. கையெழுத்து என்பதை எப்போதுமே கைவிடக் கூடாது என்பதற்கு நல்லதொரு உதாரணமாக திழ்கிறார் ராஜேஷ்குமார்.
எழுதுவதில் பொன் விழா
எழுதுவதில் பொன் விழா கண்டுள்ளார் ராஜேஷ்குமார். இது மிகப் பெரிய சாதனை. 67 வயதைத் தொட்ட போதிலும் கூட சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல எள்ளளவு கூட சுவை குறையாத எழுத்துக்களுடன் வலம் வரும் இந்த நாவல் நாயகன் எழுத்திலும் சரி இணையத்திலும் சரி முத்திரை பதித்தவர்.
ஒன்இந்தியா தமிழ் வரை
மாலை முரசு இதழுக்கு இவர் எழுதிய முதல் கதைக்கு கிடைத்த சன்மானம் 10 ரூபாய்தான். இன்று ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திலும் எழுதி வரும் ராஜேஷ்குமாரின் எழுத்துப் பயணம்.. மிகப் பெரிய செய்தியை உள்ளடக்கியது.. ராஜேஷ்குமாரின் பொன் விழா ஆண்டில் புத்தம் புதுத் தொடர் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் 19ம் தேதி முதல் நமது ஒன்இந்தியா தமிழ் இணையத்தில் தொடங்கவுள்ளதை பெருமையாக கருதுகிறோம்.
வாசகர்களுக்கு நன்றி
எப்படி இது சாத்தியம் என்று ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது, "எனது அன்பான வாசகர் ,வாசகிகளால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாயிற்று..... 1969 ல் என் முதல் சிறுகதை கோவை மாலை முரசு நாளிதழில் இதே ஜூன் மாதத்தில் வெளியாயிற்று. என் பெற்றோரின் ஆசிகளாலும் இறையருளாலும் கடந்த 50 ஆண்டுகளில் 1500 க்கும் மேற்ப்பட்ட படைப்புகள். இந்த 2019 ஆண்டுடன் 50 வருடங்களைத் தொட்டுவிட்டு பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன். இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் எனது பணிவான வணக்கமும் நன்றியும் என்று நெகிழ்கிறார் ராஜேஷ்குமார்.
பாராட்டு விழா
எழுத்துலக பிரம்மாக்களில் தவிர்க்க முடியாதவர்களில் ஒருவரான ராஜேஷ்குமாருக்கு நாளை கோவையில் ஒரு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமேசான் வெஸ்ட்லேண்ட் மற்றும் ஒடிஸி இணைந்து நடத்தும் எழுத்துலக பொன்விழாவில் வாசகர்களும் திரளாக கலந்து கொண்டு ராஜேஷ்குமாருடன் பேசலாம், கேள்விகள் கேட்கலாம்.