'இந்த கீழ்த்தரமான அரசியல் எனக்கு வேண்டாம்..' கட்சியிலிருந்தே விலகினார் பாமக துணை தலைவர் ரஞ்சித்
Recommended Video
கோவை: பாமகவில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் நடிகருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று மாலை நிருபர்களிடம் ரஞ்சித் அளித்த பேட்டி விவரம்: நல்ல கொள்கைகள் உள்ள கட்சியில் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால எண்ணம்.
அந்த வகையில்தான், நான் பாமகவின் கொள்கைகள், செயல்பாடுகளைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, அந்த கட்சியில் சமீபத்தில் இணைந்தேன். இதையடுத்து மாநில துணைத் தலைவர் என்ற பதவியை எனக்கு வழங்கி ராமதாசும், அன்புமணி ராமதாசும், மரியாதை வழங்கினார்.
கனவு தவிடுபொடி
மதுவை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், கல்விக்கான போராட்டங்கள் போன்றவை பாமகவிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு நொடிப் பொழுதில் எனது கனவுகள் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டது. மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, நான் மாநில துணைத்தலைவர் பதவி மட்டுமின்றி, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்.
சட்டையா கொள்கை
தினமும் ஒரு சட்டை மாற்றுவது போல, கொள்கைகளை விற்பனை செய்வது என்பது ஜீரணிக்க முடியாத விஷயம். தமிழகம் முழுக்க, மாற்றம், முன்னேற்றம் என்று பல ஆண்டுகளாக தினமும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வந்தது பாமக. 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களிடம் கையெழுத்து வாங்கி 8 வழி சாலை வரக்கூடாது என்று அரசுக்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்தது பாமக.
கூஜா தூக்க முடியாது
8 வழி சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போது ஒரு நொடியாவது பாமக அந்த மக்களை நினைத்து பார்த்ததா? நான் துணைத்தலைவர் பதவியில் இருக்கிறேன் என்பதற்காக 4 பேருக்கு கூஜா தூக்கி வாழ முடியாது. தப்பு யார் செய்தாலும் தப்புதான். மதுக்கடைகளுக்கு எதிராக போராடி விட்டு டாஸ்மாக் விற்பனையை நடத்துவோருடன், எவ்வாறு கூட்டணி சேர முடியும்? இது என்ன கொள்கை?
ஊழல் குற்றச்சாட்டு
குட்கா ஊழல் மற்றும் பல அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது மாறி மாறி ஒரு முதல்வரையும், அமைச்சர்களையும் மிக மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து விட்டு, அதுவும் 2 வாரம் அல்லது ஒரு மாதம் முன்புவரை மோசமாக பேசிவிட்டு இப்போது கூட்டணி வைக்கலாமா.
கீழ்த்தரமான அரசியல்
யாரை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறினோமோ, அவர்கள் காலையே கட்டிப்பிடித்து, ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதை என்னால் ஜீரணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான அரசியல் எனக்கு மனதுக்கு கஷ்டத்தை கொடுக்கிறது. எனது மனம் வெதும்பி நான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.