ரீவைண்ட் 2020... வயலில் நாற்று நட்ட அமைச்சர் முதல் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் வரை கோவை டாப் 10
கோவை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய சம்பவங்களில் டாப் 10 நிகழ்வுகளை பார்க்கலாம்.
கோவை: 2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் கோவையில் நிகழ்ந்த சில முக்கியமான டாப் 10 நிகழ்வுகளை சற்றே திரும்பி பார்க்கலாம். சில நினைவுகள் மறக்க முடியாதவை, அவற்றை மனதில் மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கும் போது அவை மகிழ்ச்சியை அதிகரிக்கும். செய்திகளும், சம்பவங்களும் அப்படித்தான் அவற்றை மறுபடியும் திரும்பி நினைத்து பார்க்கும் போது சில நினைவுகள் சந்தோஷத்தையும்,சில நினைவுகள் சோகத்தையும் ஏற்படும். கோவையில் நடந்த முக்கியமான சம்பவங்களில் சில நினைத்துப்பார்க்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
Recommended Video
ரீவைண்ட் 2020: ஜல்லிக்கட்டு முதல் ஆண்டாள் யானையின் அசத்தல் பேச்சு வரை திருச்சியில் டாப் 10
புளிச்ச கீரை தண்டில் நாப்கின்
புளிச்சகீரை தண்டுகளை பயன்படுத்தி பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை தயாரித்து அசத்தியுள்ளனர் கோவையைச் சேர்ந்த ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கெளதம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80% பிளாஸ்டிக் இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மட்க, 700 - 900 ஆண்டுகள் ஆகிறது. இப்படி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட மூலக்காரணமாக அமைகின்றன. பெண்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர்.
தலைக்கவசம் அவசியம்
கோவையில் நிகழ்ந்த உயிரை உறைய வைக்கும் விபத்து ஒன்று இப்போது நினைத்து பார்த்தாலும் நடுங்க வைக்கும். பேருந்தின் அடியில் சிக்கிய இருவர் தலைக்கவசம் அணிந்திருந்த காரணத்தால் லேசான காயங்களுடன் தப்பினர். தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது இந்த விபத்து பற்றிய செய்தி.
வெளிநாட்டு தொழில் அதிபர் யாசகம்
இந்தியாவிற்கு மன நிம்மதியை தேடி, ஆன்மீக பயணமா லட்சக்கணக்கான வெளிநாட்டினர் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கிம். பிறருக்கு சேவை செய்யும் குணம் படைத்த இவர், தனது நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்துள்ளார். கோவையில் வந்து மன நிம்மதிக்காக யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
தனி மனித இடைவெளி
கோவையில் தனி மனித இடைவெளியுடன் மொட்டை மாடியில் ஒரு குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வைரலானது. இதே போல கொரோனா காலத்தில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்த பெண்ணை காவல்துறையினர் திட்டியதால் சிறுவன் ஒருவர் தட்டிக்கேட்ட சம்பவம் பேசு பொருளானது.
மக்னா யானை மரணம்
கோவை வனப்பகுதியில் நாட்டு வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்ட போது, வெடி வெடித்து வாயில் காயமடைந்த மக்னா யானை உணவுப்பொருட்களை சாப்பிட முடியமால் சிரமப்பட்டது. சில மாதங்கள் வாயில் காயத்துடன் வேதனையோடு சுற்றி வந்த மக்னா யானை மரணமடைந்தது யானை ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நாற்று நட்ட அமைச்சர்
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவை சாடிவயல் பகுதியில் கல்குத்தி பதி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வயலில் பழங்குடியின மக்கள் நெல் நாற்று நட்டுக் கொண்டிருந்ததை பார்த்தார். காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிய அமைச்சர் திடீரென்று சேறு நிரம்பிய வயலில் வேட்டியை மடித்துக் கொண்டு இறங்கி ஒரு கட்டு நெல் நாற்று கட்டை கையில் வாங்கி மடமடவென நட ஆரம்பித்தார். பழங்குடியின மக்களுடன் இணைந்து நெல் நாற்று நட்டதைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி செயலாளர்
கோவையை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு தேசிய அளவில் பதவி கிடைத்தது. தேசிய மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்டது 2020ஆம் ஆண்டின் கோவையில் நடந்த டாப் 10 செய்தியில் இடம் பெற்றுள்ளது.
பெஸ்ட் வாட்டர் வாரியர்
கோவையின் பல நீர்நிலைகளில் களப்பணி செய்துவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பெஸ்ட் வாட்டர் வாரியர் விருதுக்கான முதல் பரிசை வழங்கியுள்ளது. குளத்தில் உள்ள ஐ லவ் கோவை என்ற இடத்தில் இப்போது ஏராளமானோர் வந்து செல்பி எடுத்து செல்வது சிறப்பம்சம். கோவையில் உள்ள குளங்கள் சிறந்த சுற்றுலா தலங்களாக மாறியுள்ளன.
கியர்மேன் சுப்ரமணியம்
கோவையில் மலிவு விலையில் உணவகம், மருந்தகம், பெட்ரோல் பங்க் நடத்தி வந்த சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு கோவை மக்களின் கண்களை குளமாக்கியுள்ளது.