அவலத்துக்கு முற்றுப்புள்ளி.. மனித கழிவை அள்ளும் ரோபோ.. அசத்திய கோவை மாநகராட்சி
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மனித கழிவுகளை அள்ள ரோபாவை அறிமுகம் செய்து கோவை மாநகராட்சி அசத்தி உள்ளது.
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆண்டுகள் பல உருண்டோடு விட்டன. ஆனால் இன்றுவரை மனித கழிவுகளை மனிதர்களை வைத்தே அள்ளும் அவலம் இந்தியா முழுவதும் தொடர்கிறது,.
அதிலும் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரே இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நோய் வாய்ப்பட்டோ அல்லது விஷ வாயு தாக்கியோ உயிரிழப்பதும் தொடர்கிறது.
விஷவாயு
கழிவுகளை அள்ளும் போது விஷ வாயு தாக்கி பல நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் தொடர்கதையாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இயந்திரங்களை வைத்து மனித கழிவுகளை அள்ள வேண்டும் என்று பல கட்சிகள் கோரிக்கைகள் வைத்து வருகின்றன.
கோவை மாநகராட்சி
இந்த சூழலில் கோவை மாநகாட்சி மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆம் கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மனிதன் இறங்கி அள்ளும் சாக்கடை குழிகள் மற்றும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுத்தம் செய்கிறது
கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள இந்த ரோபாவை சாக்கடை குழிகள் அருகே கொண்டு சென்றால் அழகாக உள்ளே இறங்கி சுத்தம் செய்கிறது. இந்த ரோபாவை மாநகாட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி இயக்குகிறார்கள்.
விஷ வாயு வந்தால்
சுமார் 20 அடி ஆழம் வரை உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டாலும் இந்த ரோபோவை இறக்கி சுத்தம் செய்ய முடியும். இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஏதேனும் விஷவாயு இருந்தாலும் அதை கண்டுபிடித்து சொல்லிவிடும் என்கிறார்கள்.
மனிதனை போல்
இது தொடர்பாக ரோபோவை உருவாக்கிய இன்ஜினியர் ரஷித் கூறுகையில், "உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட மனிதனே மனித கழிவுகளை அள்ளுவதை ஒழிக்க ரோபோக்களை அறிமுகப்படுத்துகிறோம். முன்னதாக அரசாங்கங்கள் பல நடவடிக்கை எடுத்துள்ளன, ஆனால் தீர்வுகள் தான் கிடைக்கவில்லை. மனித கழிவுகள் உள்ள சாக்கடையில் ஒரு மனிதன் செய்ய வேண்டிய செயல்கள் எதுவாக இருந்தாலும், இப்போது ரோபோவால் செய்ய முடியும்" என்றார்.