கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங் - பலத்த பாதுகாப்பு
கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதையடுத்து கோவையில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை கொடிசியா வளாகம் அருகே உள்ள மைதானத்தில் பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி பங்கேற்கும் பொது கூட்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுமான கிஷன் ரெட்டி, விகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் கோவை விமான நிலையம் வருகை தந்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மோகன் பகவத்தை வரவேற்றனர்.
கோவை அய்யப்பன் பூஜை சங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் எழுதிய இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை என்ற நூல் வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பங்கேற்கிறார். மேகாலயா ஆளுநராக பதவி வகித்த தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான சண்முகநாதன், பாலியல் சர்ச்சையால் பதவியை ராஜினாமா செய்தவர்.
இதனைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி வரை கோவையில் முகாமிடும் மோகன் பகவத், சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுடனும் தமிழக நிலவரம் குறித்தும் மோகன் பகவத் கலந்துரையாட உள்ளார்.
காண்டான காத்மாண்டு.. நேபாளத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்ல பாஸ்.. முறையான எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 500க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.