சசிகலா விடுதலை ஆட்சியிலோ கட்சியிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதல்வர்
சசிகலாவின் வருகை தமிழக அரசியலிலோ கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை: சசிகலாவின் விடுதலை தமிழகத்தில் ஆட்சியிலோ, கட்சியிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி இதனை தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவர் என்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சிறை சென்ற சசிகலா 2021ஆம் ஆண்டு விடுதலையாவார் என சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டனை காலத்துடன் விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத் தொகையையும் கட்டி விட்டார் சசிகலாவின் வழக்கறிஞர். இதனால் சசிகலாவின் விடுதலை உறுதியாகி விட்டது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்து கொண்ட சசிகலா, முதல்வராகவும் முயற்சி செய்தார். அந்த முயற்சி பலிக்கவில்லை அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை அறிவிக்கவே சிறைக்குள் போய்விட்டார்.
சிறை செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி அமர வைத்து விட்டு ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் சபதம் செய்து விட்டு சென்றார். அந்த சபதத்தை நிறைவேற்றினாரா என்பது அவருக்கே வெளிச்சம். அந்தப்பக்கம் சசிகலா சிறைக்கு போன நேரத்தில் ஆட்சி அதிகாரம், கட்சியை தனது வசப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் அணியினரையும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கட்சியும் ஆட்சியும் இபிஎஸ் ஒபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் வந்துள்ளது. ஐந்து வருட ஆட்சியும் முடிவுக்கு வரப்போகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவின் வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். அபராதத் தொகையை கட்டிவிட்டதால் சசிகலா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். சசிகலா வருகையால் ஏதேனும் மாற்றம் வருமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த மாற்றத்தையும் சசிகலாவின் விடுதலை ஏற்படுத்தாது என்று கூறினார்.