கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இது திவாகரனின் குரல்
Recommended Video
கோவை: பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் கொடநாடு கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொள்ளை,கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டது பற்றியும், முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம், சயன் கூறுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்று கூறப்பட்டுள்ளது. அதுதவிர, கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் அதில் காட்டப்பட்டுள்ளது.
வெளியான ஆவணப்படம்
நாடு முழுவதும் இந்த ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் கொடநாடு கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
பேட்டியளித்த திவாகரன்
கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார். திவாகரன் மேலும் கூறியதாவது:கொடநாடு கொலை வழக்கில் முதல்வருக்கு தொடர்புடையதாக வந்துள்ள குற்றச்சாட்டை நான் முழுமையாக பார்க்கவில்லை. தெகல்கா எதன் எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
மறைக்க முடியாத உண்மை
ஆனால் அதனை நிரூபிக்க வேண்டிய கடமை அந்த ஊடகத்திற்கு உள்ளது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்., எத்தனை சக்தி வாய்ந்த மனிதர்களாக இருந்தாலும், உண்மையை மறைக்க முடியாது.
முடியாத வழக்கு
இந்தியாவில் குற்றம்செய்த எத்தனையோ முதல்வர்கள் சிறையில் இருந்திருக்கின்றனர். கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்துவிட்டதால், அந்த வழக்கு முடிந்துவிட்டது என சொல்லிவிட முடியாது.
சிபிஐ விசாரணை தேவை
இந்த விவகாரத்தில் தொடர் கொலை ஏற்பட்டதோடு தற்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் டி.டி.வி தினகரன் பெயர்கள் அடிபடுவதால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் தினகரன் இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் இருப்பது சந்தேகம் ஏற்படுத்துகிறது.
ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு
இப்போது சசிகலாவை குற்றம்சாட்டுபவர்கள் , சசிகலாவை பொது செயலாளரை தேர்ந்தெடுத்த போது என்ன செய்தனர்? முதல்வர் என கூறிய ஓ.பி.எஸ். கோமாவிலா இருந்தார்? லோக் சபா தேர்தலுக்கு முன்பாக அஇஅதிமுக இணைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முறையான உள்ளார்ந்த வேலையை ஓ.பி.எஸ் எடுக்கவில்லை. கட்சியை இணைக்க அழைப்பு விடுத்தால் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று திவாகரன் தெரிவித்தார்.