சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. வியாபாரிகளிடம் போலீசார் கனிவுடன் நடக்க வேண்டும்.. முதல்வர் உத்தரவு!
கோயம்புத்தூர்: கோவில்பட்டி சிறையில் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுவோம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி சிறையில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு மர்ம மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் மரணம் காரணமாக போலீசுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கோவில்பட்டி சிறையில் நிகழ்ந்த மர்ம மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் தீவிரம்- நடமாடும் முகாம்கள்... வீட்டுக்கு வீடு பரிசோதனை
அதிக தீவிரம்
இது தொடர்பாகவும், தமிழகத்தில் கொரோனா தீவிரம் எடுத்துள்ளது தொடர்பாகவும் முதல்வர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், தந்தை,மகன் உயிரிழப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும். அரசு மக்கள் மீது கவனமாக இருக்கிறது. வியாபாரிகளிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்து அன்பை பெற வேண்டும். போலீசார் மக்களிடம் கனிவாக பேச வேண்டும்.
சமூக பரவல் இல்லை
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை. கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறேன். 13 பேர் கொண்ட குழுவின் ஆலோசனை 3 முறை நடந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது.கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தப்படும்.
என்ன ஆலோசனை
தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.தமிழகத்தில் பொருளாதார ரீதியான பாதிப்பு பெரிய அளவில் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை. அரசை குறை கூறுவது மட்டுமே ஸ்டாலினின் வேலை.
அரசு
அரசின் வழிமுறைகளை சரியாக பின்பற்றியதால் கோவையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது.இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்தி வரும் ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான்.நான் இரக்கமில்லாத மனிதன் என்று ஸ்டாலின் சொல்கிறார். 90 நாட்கள் வீணடிக்கப்பட்டதாக பொய்யான பழியைக் எங்கள் மீது சுமத்துகிறார்கள். 90 நாட்கள் அனைத்து பணியாளர்கள் உயிரைக் பணயம் வைத்து வேலை செய்திருக்கிறார்கள். கொரோனா குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது
ஒரு எம்எல்ஏ
கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின். அரசின் கடினமான பணிகள் எதுவும் அவரின் கண்ணுக்கு தெரியவில்லை. அரசியலில் இருப்பதை காட்டிக் கொள்ளவே தினமும் அறிக்கை வெளியிடுகிறார் ஸ்டாலின். மருத்துவ நிபுணர் சொல்லும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என கூறியதை விமர்சிக்கிறார். மு.க.ஸ்டாலின். மருத்துவ நிபுணர்குழு அறிவுரைகளை பின்பற்றியிருந்தால் ஒரு எம்எல்ஏவை இழந்திருக்க அவசியமில்லை, என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார் .