கோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
கோவை: கோவையில் முஸ்கான், ரித்திக் ஆகியோர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் தற்போது தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவருக்கு முஸ்கான் (11), ரித்திக் (8) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் கடத்தப்பட்டனர். இதில் முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிரது.
பொள்ளாச்சி அருகே உள்ள பிஏபி பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்து சென்ற ஓட்டுநர் மோகன கிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மோகன கிருஷ்ணன்
இந்த நிலையில் அதே ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி குழந்தைகளை கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை போலீஸார் அழைத்து சென்றபோது கோவை செட்டிபாளையம் அருகே தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் மோகன கிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேல்முறையீடு
மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், மனோகரனுக்கு இரட்டை தூக்கும் மூன்று ஆயுள் தண்டனையும் கடந்த 2012-ஆம் ஆண்டு விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனு தாக்கல்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மனோகரனின் தூக்கை உறுதி செய்தது.
இடைக்கால தடை
இந்த நிலையில் தூக்குத் தண்டனையை மறுஆய்வு செய்ய மனோகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நாரிமன் தலைமையிலான அமர்வு மனோகரன் மீதான தூக்கு தண்டனையை வரும் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.