இன்னொரு பொள்ளாச்சி.. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது.. மாணவிகளை துன்புறுத்திய ஐவரின் அட்டகாசம்!
கோவை: இன்னொரு பொள்ளாச்சி சம்பவமா.. நினைச்சாலே இன்னமும் நடுங்கி போகும் நிலையில், அதேபோல கொடூரம் நடந்துள்ளது.
ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் முகமது சபீர். இவரது நண்பர்கள்தான் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகியோர். இந்த 5 பேரும் எப்போதுமே ஒன்றாக சுற்றி திரிபவர்கள் என்று சொல்லப்படுகிறது. 21 வயசைகூட தாண்டாதவர்கள் இவர்கள்!
இவர்கள் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்க வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்தும் அவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.
மாணவிகள் பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும், இதற்காகவே காத்திருந்து, தினந்தோறும் அவர்களின் கையை பிடித்து இழுப்பது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று டார்ச்சர் செய்துள்ளனர். மாணவிகளை கட்டாயப்படுத்தி இப்படி செய்வதை செல்போனில் போட்டோவாகவும் எடுத்து வைத்து கொண்டனர்.
மேலும் இந்தப் போட்டோக்கள் அனைத்தையும், இணையத்தில் பதிவிட்டதாகவும் தெரிகிறது. இந்த விஷயம் மாணவிகளின் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து, அவர்களின் பெற்றோர்கள், இளைஞர்களிடம் தட்டி கேட்டுள்ளனர். அதற்கு பெற்றோரையும் இளைஞர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோர் ஆனைமலை போலீஸில் 5 பேர் பற்றியும் புகார் அளித்தனர். அதன்பேரில் இளைஞர்கள் 5 பேரையும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களில் முகம்மது சபீர் மீது மட்டும் கூடுதலாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்துக்கே இன்னும் ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து இளம் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் பாதிக்கப்பட்டு வருவது கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழக மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது