மதுபோதையர்களால் விபத்து.. மனைவியை பறிகொடுத்த மருத்துவர்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்!
கோவை: மது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் கூறினார்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி மருத்துவர் ரமேஷ் என்பவரின் மனைவி ஷோபனா சாலை விபத்தில் மரணமடைந்தார். பள்ளியில் இருந்து தனது மகளை ஸ்கூட்டரில் அழைத்து வந்தார் ஷோபனா.
அப்போது எதிரே குடிபோதையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதினர். இதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியின் சடலத்தோடு
அவரது மகள் கை, கால் எலும்புகள் முறிந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தன் மனைவியின் சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.
நேரில் சந்தித்து ஆறுதல்
இதையடுத்து அந்தப் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவர் ரமேஷை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சம்பவ இடத்தில் பலி
இதுதொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஜூன் மாதம், கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மதுபோதையில் கண்மூடித்தனமாக வாகனத்தில் வந்த சிலர், மருத்துவர் ரமேசின் மனைவி ஷோபனா சென்ற வாகனத்தின் மீது கடுமையாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார் ஷோபனா.
சீமான் ஆறுதல்
அவரது மகள் சாந்தலா படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தக் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்துபோன குடும்பத்தை இன்று 17-08-2019 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.