எது.. கோட்டையா? அடிமடியிலேயே.. செந்தில்பாலாஜி டார்கெட்.. வேகத்தைக் கூட்டும் வேலுமணி! தகிக்கும் கோவை!
கோவை : கோவை என்றுமே அதிமுகவை கைவிடாது என்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் குரலாக இருந்து வரும் நிலையில், அதெல்லாம், முன்பு, இப்போது நிலைமை மாறிவிட்டது, செந்தில் பாலாஜி வேகத்துக்கு ஈடுகொடுக்க எஸ்பி வேலுமணி அதிமுகவினரை விரட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கோவை திமுக வட்டாரத்தினர்.
நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியையும் வரவழைத்து திமுக அரசுக்கு எதிராக முழங்கிய எஸ்.பி.வேலுமணி, இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததற்குக் காரணமே செந்தில் பாலாஜி போட்ட சூடு தான் என்கிறார்கள்.
மற்ற பகுதிகளுக்கெல்லாம் முன்னோடியாக கோவையில் தேர்தல் ரேஸ் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, கோவை களம் செந்தில் பாலாஜி vs எஸ்பி வேலுமணி வியூகங்களின் போட்டியாக இருக்கப்போவதால் அரசியல் களம் டிசம்பரிலும் கூட தகிக்கத் தொடங்கி இருக்கிறதாம்.
அரசியலில் இருந்தே விலகல! ’திராவிட’ பாரம்பரியத்தை விட மாட்டேன்! கோவை செல்வராஜ் அதிரடி! அந்த கட்சியா?
செந்தில் பாலாஜி வேகம்
கோவையைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் அதிமுகவே தேர்தல் ரேஸில் முன் நின்று வந்துள்ளது. ஆனால், இந்த முறை காட்சிகள் அப்படியே மாறி இருக்கின்றன. அதிமுகவை விட வேகமாக செந்தில் பாலாஜி வியூகங்களை வகுத்து வேலை செய்து வருவதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, செந்தில் பாலாஜியின் உத்தரவுப்படி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் நியமிக்கத் தொடங்கி இருக்கின்றனராம் திமுகவினர்.
கிளைமேட் மாற்றம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எஸ்பி வேலுமணியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கோவையின் அத்தனை தொகுதிகளையும் இழந்தது திமுக. பின்னர் தான், கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன்பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்தது திமுக. அதே வேகத்தில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் செந்தில் பாலாஜியின் தலைமையில் தயாராகி வருகிறது கோவை திமுக படை.
அள்ளி வீசப்பட்ட பரிசுகள்
உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாளையொட்டி, கோவை முழுக்கவே கோலப் போட்டிகளை நடத்தியது திமுக. கோவையில் முதன்மையாக, பெருவாரியாக இருக்கும் பெண் வாக்காளர்களை கேப்ச்சர் செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டியுள்ளனர். அதையொட்டியே, மாவட்டம் முழுவதும் பூத் வாரியாக சுமார் 3000க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சூட்டோடு சூடாக ‘ஹாட் பாக்ஸ்'கள் பரிசுகளாக அளிக்கப்பட்டிருக்கின்றன.
புருவம் உயர்த்திய அதிமுக
கோலப் போட்டிக்கு கொடுத்த பரிசு என்பதாக அல்லாமல், தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவே இதை செயல்படுத்தியுள்ளனர் திமுகவினர். தேர்தலுக்கு நாள் நெருங்க நெருங்க நேரடியாக பெண்களை அணுகும் வகையில் இப்படி பல்வேறு வியூகங்களையும் நிர்ணயித்துள்ளனராம் திமுகவினர். இந்த வியூகங்கள் தான் அதிமுகவின் பெரும் புள்ளியான எஸ்பி வேலுமணி தரப்பையே புருவம் உயர்த்த வைத்துள்ளதாம்.
அதெல்லாம் பிரச்சனையே இல்ல
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, எப்போதுமே நாம் தான் வேகமாக தேர்தல் வேலையைத் தொடங்குவோம், இப்போது அவர்கள் தொடங்கிவிட்டார்கள், இப்போதுதான் நமக்கு உண்மையான சவாலே வந்திருக்கிறது, கட்சியில் நிலவும் குழப்பம் எல்லாம் நமக்கு பிரச்சனையே கிடையாது, நீங்கள் நம் போக்கில் எப்போதும் போல வேகம் காட்டுங்கள் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
ஆட்சியை கலைங்க
அதோடு நிற்காமல், நேற்று முன்தினம் கோவையில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார் வேலுமணி. இந்த போராட்டத்தில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, தைரியமிருந்தால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தல் வைக்க வேண்டும், வைத்தால் எடப்பாடிதான் முதல்வர் என சவால் விடுத்தார். கேட்ட திட்டங்களையெல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்றும் கொதித்துப் பேசினார்.
பாலாஜி போட்ட சூடு
மேலும், கோவையில் நாம் கூட்டம் நடத்தினால் திமுக அரசுக்கு அது முடிவு காலம் என்றும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார் வேலுமணி. மற்ற பகுதி அதிமுகவினருக்கு எல்லாம் முன்னோடியாக எஸ்பி வேலுமணி போராட்ட அரசியலை முன்னெடுத்து திமுகவை விளாசத் தொடங்கி இருக்கிறார். வேலுமணி, நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து, தீவிரம் காட்டத் தொடங்கியதே செந்தில் பாலாஜி போட்ட சூடுதான் என்கிறார்கள் லோக்கல் ர.ரக்கள்.