மொட்டை மாடியில் குழந்தைக்கு ஹேப்பி பர்த்தே.. அசர வைத்த அக்கம் பக்கத்தினர்.. வைரலாகும் வீடியோ!!
கோவை: மொட்டை மாடியில் சமூக விலகலை கடைப்பிடித்தபடியே தங்கள் மகனுக்கு ஒரு வயது பிறந்த நாள் விழாவினை கோவை தம்பதியினர் கொண்டாடி உள்ளனர்.. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.
Recommended Video
சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஆரம்பத்தில் அசால்ட்டாக இருந்தவர்கள், தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்வு, வைரஸ் அபாயம் பற்றின தகவல்கள் குறித்து தினந்தோறும் அறிந்து சமூக விலகலை தன்னிச்சையாகவே கையில் எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஆடம்பரமாக சுற்றம் சூழ நடக்க வேண்டிய திருமணங்கள்கூட வெகு எளிமையாக நடத்தி முடிக்கப்படுகிறது.. இந்த திருமணங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் உறவினர்கள் பார்த்து மகிழ்கின்றனர்.
கல்யாணத்தை போலவே பிறந்த நாளும் எளிமையாக கொண்டாடப்பட துவங்கிவிட்டனர்.. பொதுவாக ஒரு குழந்தையின் முதல் பிறந்த நாள் என்பது பெற்றோருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாதது.. முதல் பிறந்த நாள் என்பதால் கிராண்ட்-ஆகவே இருக்கும்... குழந்தையை கோயிலுக்கு கூட்டி செல்வார்கள்.. சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்து, கேக் வெட்டி கொண்டாடுவார்கள்.. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் கோவையில் ஒரு பிறந்த நாள் விழா படுவித்தியாசமாக கொண்டாடப்பட்டுள்ளது.
அரசு அறிவுறுத்தியதால், சமூக இடைவெளியுடன் 1 வயது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது... கோவையில் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி சாமுவேல் - சாரா.. இவர்களது மகன் ஜெகில் ட்ரிஸ்.. இவனுக்குதான் முதல் பிறந்தநாள்.. இதனை சிறப்பாக கொண்டாட முடியாவிட்டாலும் மொட்டை மாடியில் அக்கம் பக்கத்தினர் பார்க்கும்படியாக கொண்டாட நினைத்தனர்.
மொட்டை மாடியில் தீப ஒளியுடன் அனைவர் முன்னிலையிலும் ஜெகில் ட்ரிஸ் கேக் வெட்டினான்.. 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர் அவரவர் வீட்டு மொட்டை மாடியில் இருந்தபடியே கைத்தட்டி பிறந்தநாள் பாடல் பாட்டு பாட.. காற்றின் வழியாக குழந்தைக்கு வாழ்த்து வந்து சேர்ந்தது.
இந்த நிகழ்வு குறித்து வீடியோவையும் சாமுவேல் தம்பதியினர் பிடித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. இது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.. பாராட்டுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்தையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.. நாமும் ஜெகில் ட்ரிஸ்-க்கு ஹேப்பி பர்த்டே சொல்லுவோம்!!!