கொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் தகடு பொருத்தம்
Recommended Video
கோவை: கொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து தகடு பொருத்தப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ஆம் தேதி சென்னையிலிருந்து கோவை வந்தார். அவரை வரவேற்று அவினாசி சாலையில் அதிமுக கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.
பீளமேடு சாலையோரம் 15 அடி உயரத்தில் நடப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரியை திருப்பியுள்ளார். அச்சமயம் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ராஜேஸ்வரி (22) கீழே விழுந்தார்.
அவர் மீது லாரி மோதியது. இதில் காயமடைந்த ராஜேஸ்வரி கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது இடது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அவரது இடது காலை முட்டியிலிருந்து அகற்றினர்.
தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரிக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்து தகடு பொருத்தப்பட்டது. அவருக்கு சுயநினைவு வந்தால் வலியை பொருத்துக் கொள்ள முடியாது என்பதால் அவரை மயக்க நிலையிலேயே வைத்திருக்கவும் மேலும் ஒரு வாரத்துக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.