எங்க பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்.. அடாவடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி
கோவை: மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் தான் வர வேண்டும் என கூறி தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று, குழந்தைகளை 2 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கோவை அருகே விளாங்குறிச்சி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றி இயங்கி வருகிறது. இங்கு கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது.
வழக்கமாக மாலை 3 மணிக்கு பள்ளி முடிந்து சிறிது நேரத்தில் மாணவர்கள் வீடு திரும்பி விடுவார்கள். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் மாலை 4 மணிக்கு மேலாகியும், மாணவர்கள் யாரும் தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியடித்து கொண்டு பள்ளிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பார்த்தால் மாணவ, மாணவிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பாமல், பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் உட்கார வைத்திருந்தர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளி நேரம் முடிந்த பின்னும் ஏன் இன்னும் எங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பாமல் உட்கார வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தந்த பதில் தான் பெற்றோரை ஆத்திரத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பெற்றோரின் கேள்விக்கு பதிலளித்த பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளிக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்களில் தான் மாணவர்களை எங்களிடம் படிக்க அனுப்ப வேண்டும்.
அதை விடுத்து தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் தங்கள் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப கூடாது என நிபந்தனை விதித்தனர். தனியார் பள்ளி நிர்வாகத்தின் இந்த அடாவடி நிபந்தனையால், கடுப்பான பெற்றோர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவானதாக கூறப்படுகிறது. பிரச்சனை தீவிரமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், மாணவர்கள் எந்த வாகனங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்பது குறித்து பிறகு பேசி கொள்ளலாம் என கூறி, பெற்றோர்களுடன் அவர்களது பிள்ளைகளை வீட்டுக்கு திருப்பியனுப்பியுள்ளது.
பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தான் மாணவர்கள் வர வேண்டும் என்ற காரணத்திற்காக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிறை பிடித்து வைக்கப்பட்ட சம்பவத்தால் கோவை மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.