குமுறிய பயிற்சி மருத்துவர்கள்.. கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் திடீர் இடமாற்றம்
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் அசோகன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு கவச உடைகள், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பயிற்சி மருத்துவர்கள் புகார்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எனினம் பல்வேறு புகார்கள் காரணாமாக பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை வதந்தி என்று கூறி டாக்டர் அசோகன் மறுத்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அசோகன். மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மருத்துவமனையின் பொறுப்பு டீனாக தொற்று நோயியல் துறை பேராசிரியர் காளிதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலைமை மோசம்
இந்நிலையில் டாக்டர் அசோகன் இடமாற்றம் செய்யப்பட்ட விவாகரத்தில் பயிற்சி மருத்துவர்கள் அளித்த புகார்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், முதுகலை, இளங்கலை மருத்துவ பயிற்சி டாக்டர்கள் நிலை மோசமாக உள்ளது. . நாங்கள்தான் கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக சோதனை செய்கிறோம். சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு உத்தரவு போட்டு மேற்பார்வையிடும் பணிகளைதான் டாக்டர்கள் செய்கிறார்கள்.
கொரோனா நோயாளிகள்
எங்களுக்கு மட்டும் ஒருவார பணி கிடையாது. எல்லா நாட்களும் பணிக்குச் செல்ல வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. எங்களுக்கு கோரண்டைன் அறைகள் கிடையாது. மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல் நட்சத்திர ஓட்டல்கள் இல்லை. கிடையாது. கொரோனா வார்டில் இருந்து நேரடியாக, நாங்கள் வழக்கம்போல எங்கள் விடுதியில்தான் தங்க வேண்டியது உள்ளது ஒவ்வொரு விடுதியிலும் 70 ஆண்கள், 70 பெண் பயிற்சி டாக்டர்கள் அவரவர் விடுதியில் மொத்தமாக தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அனைவருக்கும் எளிதாக பரவிவிடும்.
உயிருக்கு பாதுகாப்பில்லை
கோவையில் 2 டாக்டர்கள் மற்றும் 2 பயிற்சி டாக்டர்களுக்கு நோய் தாக்கி உள்ளது. எங்களுக்கு எந்த உயிர்பாதுகாப்பும் இல்லை. பயிற்சி டாக்டர்களுக்கும் தேவையான கவச உடைகள், மாஸ்க் வழங்க வேண்டும்.மேலும் கொரோனா வார்டு சிகிச்சை அளிக்கும் பயிற்சி டாக்டர்களுக்கு சாப்பாடு சரியாக வழங்குவதில்லை. எங்களை சூபர்வைசர் செய்யும் டாக்டர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் கொடுப்பதால், அங்கே உணவு வழங்கப்படுகிறது. எங்களுக்கு சரியான உணவுகள் வழங்கப்படுவதில்லை... நோயாளிக்கு தரமான, சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதில் 10ல் ஒரு பகுதி கூட எங்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம் இதனால் டீன் அசோகன் மாற்றப்பட்டுள்ளார்" என்று கூறினார்கள்.
அசோகன் விளக்கம்
பல்வேறு பிரச்னைகளை தொடர்பான புகாரையடுத்து டீன் அசோகன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன் மீது, சென்னை இயக்குனரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாகவே, அசோகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து டாக்டர் அசோகன் கூறுகையில், ''உடல்நலத்தை கருத்தில் கொண்டு முன்னறே சென்னை இயக்குனரகத்தில் பணியிமாற்றம் குறித்து பேசியிருந்தேன். இந்நிலையில், பொறுப்பு டீன் ஒருவரை நியமித்துவிட்டு சென்னைக்கு வரும்படி உத்தரவு வந்தது.. ஆனால், மருத்துவ மாணவர்கள் புகார் கொடுத்து, மருத்துவ கல்வி இயக்குனர் நடவடிக்கை எடுத்ததன் மூலமாகதான், நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி,'' இவ்வாறு கூறினார்.