'கொரோனாவை கொல்லும் மைசூர்பா..' கிலோ ரூ.800.. சிக்கிய கோவை இனிப்பகம்.. சீல் வைத்த அதிகாரிகள்
கோவை: கொரோனாவை கொல்லும், மூலிகை மைசூர்பா, என்று கூறி மைசூர்பா விற்பனை செய்த கோவை கடைக்கு சீல் வைத்துள்ளது உணவு பாதுகாப்பு துறை.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இயங்கி வந்தது, ஶ்ரீராம் விலாஸ் நெல்லை லாலா கடை. இதன் உரிமையாளர் பெயர் ஸ்ரீராம். பல கிளைகள் இந்த இனிப்பகத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் ஓகேதான். ஆனால், சமீபத்தில் இந்த இனிப்பகம் செய்த ஒரு விளம்பரம் சிக்கலில் மாட்டி விட்டு இப்போது சீல் வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்
ஒரே நாளில் குணமாகும் கொரோனாவாம்
இவர்கள் வினியோகித்த துண்டு பிரசுரத்தின் முதல் வார்த்தையே, ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம்!!! என்பதுதான். உலக விஞ்ஞானிகளே தலையை பிய்த்துக் கொண்டு மருந்து தேடிக் கொண்டிருக்கும்போது, "நீங்க சீப்ப வச்சி போட்ட பிளான நான் சிம்பிளா முடிச்சிட்டேன் பார்த்தீங்களா.." என்ற காமெடி சீனை நினைவுபடுத்தும் வகையில், சீரியசாகவே இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டது அந்த ஸ்வீட் ஸ்டால்.
சின்னியம்பாளையம்
அந்த விளம்பரத்தின் அடுத்த லைன்- " ஆம் மக்களே, இது சின்னியம்பாளையத்திலும், வெள்ளலூரிலும் நிறைவேறியது- மூலிகை மைசூர்பா மூலமாக" என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. கொரோனாவுக்கு எதிரான இந்த மூன்றாம் உலகப்போரில், பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக எங்களது மைசூர்பாவை கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று அடுத்ததாக பில்ட்அப் வரிகள் வேறு.
அதிரடி சீல்
இந்த நிலையில்தான், இதுதொடர்பாக கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு, இனிப்பகத்தில் ஆய்வு நடத்தியது. உரிமையாளர் சரியாக பதில் கூறவில்லை என்பதால் இனிப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிமையாளர் ஸ்ரீராம் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 இன் பிரிவு 53 (தவறான விளம்பரத்திற்கான அபராதம்) மற்றும் 61 (தவறான தகவல்களுக்கான தண்டனை) போன்றவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 வகை மூலிகைகள்
கொரோனா கொல்லி மைசூர்பாவில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, திரிபலா, மஞ்சள், முருங்கை இலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவை உள்ளடங்கிய 19 மூலிகைகள் உள்ளதாக ஸ்ரீராம் கூறியுள்ளார். இந்த மைசூர்பா கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என்று கூறி விற்பனை செய்துவந்தார். எனவே கடையில் இருந்த 120 கிலோ மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
ஒரு கிலோ ரூ.800
ஒரு கிலோ ரூ.800 என்ற அளவுக்கு கொள்ளை லாபத்துடன், இந்த மைசூர்பாவை விற்பனை செய்துள்ளார் ஸ்ரீராம். பேரிடர் காலத்தில் தவறான தகவல் அளித்து மக்களை ஏமாற்றியுள்ளனர். சித்த மருத்துவ ஆய்வாளர் கீதா இதுபற்றி கூறுகையில், ஒருவேளை மூலிகை உண்மையில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சித்த மருந்து பயன்படுத்துவதற்கு அரசிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அதை இந்த இனிப்பகம் செய்யவில்லை என்றார்.