கோவை எஸ்பிக்கு நெருக்கடி.. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி
சென்னை: பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட, கோவை மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம், தமிழ் நாட்டையே உலுக்கியுள்ளது.
இது தொடர்பாக சில நாட்கள் முன்பாக, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி பாண்டியராஜன் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை தெரிவித்தார்.
ஜாமீன் கிடைத்தும் சிறையில் வாடுகிறார் நிர்மலா தேவி... தாமதம் ஏன்?
எதிர்க்கட்சிகள்
நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்க கூடாது. ஊடகங்களில் கூட, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் செய்தி வெளியிட முடியாது. ஆனால் ஒரு மாவட்டத்தின் போலீஸ் கண்காணிப்பாளராக உள்ள ஒருவர், இந்த நெறிமுறைகளை மீறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் தெரிவித்தது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
தமிழக அரசாணை
எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும், கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை கண்டித்தனர். இதையடுத்து பேட்டியளித்த பாண்டியராஜன், தான் தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டு விட்டதாக விளக்கம் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அந்தப் பெண் படிக்கும் கல்லூரி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றன. இது மறுபடியும், மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25 லட்சம் ரூபாய் இழப்பீடு
இந்தச் செயல்கள் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நீதிமன்றம், உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட, கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
நடவடிக்கை எடுங்க
இருப்பினும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் தொடர்பான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. இது தொடர்பாக இன்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்ட எஸ்பி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. அதேநேரம் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு, முறைப்படி, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
பாண்டியராஜனுக்கு நெருக்கடி
தேர்தல் அதிகாரி வழங்கியுள்ள இந்த அனுமதி காரணமாக எஸ்பி பாண்டியராஜனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சத்யபிரதா சாஹு, மேலும் கூறுகையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி, பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.