சசிகலாவுக்கு ஆதரவா.. நான் ஒன்னு சொல்ல.. நீங்க ஒன்னு புரிஞ்சுகிட்டிங்களே... எஸ்.பி வேலுமணி விளக்கம்!
கோவை: அதிமுகவில் பிளவு என்பது சாத்தியமில்லை என்றும் அண்ணன், தம்பியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்று தான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை எனவும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என்றும் அவர் பேசினார்.
அதிமுக நூறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை முதல்வரும், துணை முதல்வரும் கொண்டு வந்துள்ளனர் .
Exclusive: சசிகலாவை சந்திப்பது பற்றி முடிவெடுக்கவில்லை... ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஓபன் டாக்..!
அதிமுக சார்பில் திருமணம்
கோவை, பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் பிப்ரவரி 15ஆம் தேதி அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 123 ஜோடிகளுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது என்றார்.
நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது
நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது:-
அண்ணன், தம்பியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்று தான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. தொகுதிக்கு 50 பேர் வேட்பாளர்களாக தகுதி இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு பேசினேன்.
பெட்டி வைத்து மனு வாங்குகிறார்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை எனவும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்ததாகக் கூறுகிறார். ஆனால், மற்ற தொகுதிகளில் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணாமல் பெட்டியை வைத்து மனுக்களை வாங்கி வருகிறார்.
தினகரன் மீது தாக்கு
அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு, மு க ஸ்டாலின் குறுக்கு வழியில் முதலமைச்சராக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று கூர்க்கில் வைத்தபோது தினகரனுக்கு திமுக பொது எதிரி என்பது தெரியவில்லையா? திமுகப் பொது எதிரி என்பதால் தான் எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்ததார். அதிமுக நூறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை முதல்வரும், துணை முதல்வரும் கொண்டு வந்துள்ளனர் .
ஸ்டாலினுக்கு பயம்
இரட்டை இலை சின்னத்தை பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீட்டெடுத்து உள்ளோம். முதல்வரை பார்த்து மு.க.ஸ்டாலின் பயந்து மிரண்டு போய் உள்ளார். மு க ஸ்டாலின் திமுக வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதிமுகவில் பிளவு என்பது சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.