தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் இரண்டாவது நாளாக பலத்த பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பு!
கோவை: தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக நேற்று முன் தினம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு அவசர கடிதம் ஒன்றை உளவுத்துறை இ-மெயில் மூலம் அனுப்பியது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் வணிக வளாகங்கள், கோவில்கள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல் கிடைத்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அம்மாவட்ட காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
போலீசார் மற்றும் ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும் சுமித்சரண் கூறியுள்ளார். சூலூர் விமானப்படை தளம், வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கோவையில் போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.