கோவை: கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்த தாய்லாந்து இளைஞர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
கோவை: கொரோனா அறிகுறியுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நெகட்டிவ் ரிசல்ட் என வந்த நிலையில் தாய்லாந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Recommended Video
தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் கோவையில் இருந்து அவரை விமானம் மூலம் தாய்லாந்து அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக கோவை மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவை மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறுநீரக பிரச்சனையும் இருந்து வந்தது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் டான் ரோசாக்கின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் சென்னையில் இருந்து கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனால் சிறுநீரக பாதிப்பால் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக தாய்லாந்து தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.