ஒப்பந்ததாரர்களுக்கு கட்டையை போடும் அதிகாரிகள்! சர்ச்சையில் கோவை மாநகராட்சி நிர்வாகம்!
கோவை: கோவை மாநகராட்சியில் புதிதாக ஒப்பந்ததாரர்களை பதிவு செய்வதற்கு அங்குள்ள சில அதிகாரிகள் அணை போட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஃபர்ஸ்ட் கிளாஸ் காண்ட்ராக்டர்கள் பட்டியலில் இணைவதற்கான அனைத்து தகுதிகள் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆளுங்கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் கோவை மாநகராட்சியில் அதிகாரிகள் கொடி உயரப்பறக்கிறதாம்.
அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. 'பயணக் கட்டுப்பாடுகள் எல்லாம் பலன் தராது. இதை செய்யணும்..' WHO வார்னிங்
கோவை மாநகராட்சி
சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் பெரிய மாநகராட்சியாக திகழும் கோவையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாநகராட்சியில் 285 ஒப்பந்ததாரர்கள் இருக்கின்றனர். முதல் வகுப்பு ஒப்பந்ததாரர்களுக்கு 75 லட்சம் ரூபாய்க்கு மேல் பணிகள் வழங்கப்படும். இரண்டாம் வகுப்பு ஒப்பந்ததாரர்களுக்கு 75 லட்சம் ரூபாய்க்குள் பணிகள் அளிக்கப்படும்.
85 பேர்
இதேபோல் மூன்றாம் வகுப்பு ஒப்பந்ததாரர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரையும், நான்காம் வகுப்பு ஒப்பந்ததாரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையும் மாநகராட்சி டெண்டர் பணிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு அடுத்தப்படியாக ஐந்தாம் வகுப்பு நிலையில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரையும் பணிகள் வழங்கப்படுகின்றன. இதில் முதல் வகுப்பு எனப்படும் ஃபர்ஸ்ட் கிளாஸ் காண்ட்ராக்டர்களாக இருப்பவர்கள் 85 பேர்.
இழுத்தடிப்பு
இந்த 85 பேரை தாண்டி தற்போது புதிதாக முதல் நிலை ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் இணைய விரும்புபவர்களை மாநகராட்சி அதிகாரிகள் சாக்குபோக்குகளை சொல்லி அலைக்கழிக்கிறார்களாம். ஃபர்ஸ்ட் கிளாஸ் வரிசையில் சேர்ப்பதற்கான அனைத்து சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகுதிகளை காண்பித்தும் கூட முறைப்படி ஒப்பந்ததாரராக பதிவு செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடிக்கிறதாம்.
குற்றச்சாட்டு
கோவையில் ஆளுங்கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மாநகராட்சியில் அதிகாரிகள் ராஜ்யம் கொடிகட்டி பறப்பதாக தெரிவிக்கிறார் உள்விவரம் அறிந்த ஒருவர். அதிமுக ஆட்சியில் பதிவு செய்து ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வருபவர்களே இப்போதும் மாநகராட்சி பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருவதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதும் இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டாகும்.