ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்
கோவை: ஏழைகளுக்காக அரசு எதையும் செய்யவில்லை, 50 லட்சம் ஏழைகள் பயன்பெறும் வகையிலான திட்டம் எங்களிடம் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மகேந்திரனை ஆதரித்து கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் தமிழகத்தில் மாற்றத்திற்கான நாள் 18 ஆம் தேதி, அதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தின் முன்னேற்றத்தில், நாளைய வருமானத்திற்கு நீங்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் மாற்றம் தான் அதற்கு ஒரே வழி எனவும் கூறினார். மக்களை அன்றாடம் காட்சிகளாக வைத்திருப்பது தவறு; நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் அதுவாகத்தான் தீரும் என்றும் தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
ஆம் ஆத்மியுடன் கூட்டணி சரி வரவில்லை.. டெல்லியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு
இது மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு என்றும் வாக்களிக்காதவர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் முக்கியமாக, இளைஞர்கள் வரவேண்டும் எனவும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். மேலும், காவல்துறையை அரசு ஏவல் துறையாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஏழைகளை அதிகாரிகள் அலைக்கழிக்கக்கூடாது, அவர்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசுகள் தான் இங்கு உள்ளன என்று விமர்சனம் செய்த கமல்ஹாசன், பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை விட கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.