அரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்டப்படும்... பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி: மழை காலங்களில் வீணாக அரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பவானி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு கேரளா வழியாக கோவை மாவட்டம் வந்தடைகிறது. இந்த ஆறு நீரை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். மேலும் குடிநீர் பிரச்சினையும் தீர்ந்து வருகிறது.
பவானி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு கோவை மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கேரள அரசு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்
இந்தநிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர், சேர்வைக்காரன், புதூரில், தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து கடந்தாண்டு ரூ.2 கோடி செலவில் அரபிக்கடலில் வீணாக சென்று கடலில் தண்ணீரை சேமிக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.
இன்று சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தடுப்பணையை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டதன் மூலம் மழைக் காலங்களில் வீணாகச் சென்று. கேரளா அரபிக்கடலில் கலக்கும் தண்ணீர் சேமிக்கப்படும்.
மேலும், இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுவதோடு சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும். அதே போல், மழைப் பொழிவின் போது மேற்கு நோக்கிப் பாய்ந்து வீணாக சென்று அரபிக் கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் விதமாக 6 தடுப்பணைகள் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும், 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேவம்பாடி வலசு குளம் தூர் வாரப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தெரிவித்தார்.