அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா
பொள்ளாச்சி கோர்ட் வளாகத்தில் திருநாவுக்கரசின் தாயார் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை: "என் பையன் ஒரு தப்பும் பண்ணல.. அவன் மேல கேஸ் போட்ட பொண்ணுங்களை கூப்பிட்டு விசாரிங்க" என்று முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் அம்மா கோர்ட் வளாகத்தில் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது!
தமிழகமே இப்படி சம்பவத்தை கற்பனை பண்ணிக்கூட பார்த்திருக்காது. பொள்ளாச்சி சம்பவம் காரணமாக, தமிழக மக்கள் 2 நாளாக உச்சக்கட்ட கொதிப்பிலும் ஆத்திரத்திலும் உள்ளனர்.
இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றவர்கள் யாரோ? ஒழுங்காக வளர்க்க தெரியாமல், கண்டிக்க தெரியாமல் இந்த லட்சணத்தில் வளர்த்திருக்கிறார்களே என்று ஒவ்வொரு குடும்பத்திலும் மக்கள் நொந்து கொண்டு வயிறு எரிந்து கிடக்கிறார்கள்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு
திருநாவுக்கரசு
ஆனால் இதற்கு நேர்மாறாக இன்று கோவை கோர்ட்டில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆஜராகவில்லை
ஆனால் இதில் ஒருநல்ல விஷயம் என்ன தெரியுமா? இந்த வழக்கில் வக்கீல்கள் யாருமே ஆஜராகவில்லை என்பதுதான். வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் லதா நேரடியாகவே மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனால் லதாவும் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
இப்படி செய்துட்டானே?
மகனுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று கோர்ட் வளாகத்திலேயே காத்திருந்தார். ஆனால் நீதிபதி ஆறுமுகமும் ஜாமீன் வழங்க முடியாது கண்டிப்புடன் உத்தரவிட்டுவிட்டார். இதனிடையே கோர்ட் வளாகத்தில் வந்திருந்த பொதுமக்கள், "உன் பையன் இப்படி செய்துட்டானே" என்று லதாவை பார்த்து நேரடியாகவே பேசியதாக தெரிகிறது.
யார் தப்பு செஞ்சது?
ஒரு பக்கம் ஜாமீன் இல்லை, மற்றொரு பக்கம் பொதுமக்களின் வசை சொற்களால் லதா டென்ஷனாகி விட்டார். அதனால் கோர்ட் வளாகத்திலேயே ஆவேசமாக கத்த ஆரம்பித்தார். "யார் தப்பு செஞ்சது? என் பையனா? என் பையன் எந்த தப்பும் பண்ணல. அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ, அந்த பொண்ணுங்களை பிடித்து முதல்ல விசாரிங்க. என் பையன் மேல போட்டது ஒரு பொய் கேஸ்.. பொய் வழக்கு போட்டிருக்காங்க" என்று கூச்சல் போட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.