திருமண நிகழ்ச்சி- உற்சாக வரவேற்பு- எடப்பாடி கோட்டையில் வெள்ளோட்டம் பார்க்கிறாரா ஓபிஎஸ்?
கோவை: கோவை பகுதிகளில் திருமண நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் திடீரென துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றது அதிமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை. இந்த கோட்டைதான் அதிமுக ஆட்சியை பிடிக்க ஆணிவேராக இருந்து வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவை தந்து வருவதும் இந்த கொங்கு கோட்டைதான். இதனால் இந்த பகுதியில் எப்படியாவது கணிசமான தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருந்து வருகிறது.
கோவையில் ஓபிஎஸ்
இந்த நிலையில் திடீரென கோவை பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடியார் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்; சசிகலா விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை காட்டி வருகிறார்.
ஓபிஎஸ் பயணம்
ஆனால் ஓபிஎஸ் தரப்பு கனத்த அமைதி காக்கிறது. இந்த அமைதிக்கு பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன என ஏகப்பட்ட யூகங்கள் வலம் வருகின்றன. இந்த நிலையில் திடீரென கொங்கு பகுதியில் ஓபிஎஸ் விசிட் அடித்ததுதான் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஓபிஎஸ்-க்கு வரவேற்பு
கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டிபிஎம் ஜின்னா மகன் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் டி.பி.எம். ஆத்திக் இல்லத்திற்கு வருகை தந்தார் ஓபிஎஸ். அப்போது பட்டாசு வெடித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் 6 அடி ரோஜா மாலை அணிவித்தும் ஓபிஎஸ்-க்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பரபரப்பான ஒருநாள் பயணம்
மேலும் பழனி கணக்கம்பட்டி பழனிச்சாமி சித்தர் திருவுருவப் படம், நினைவு பரிசாக ஓபிஎஸ்-க்கு வழங்கப்பட்டது. பிறகு டிபிஎம் ஜின்னாவின் துணைவியார் மரணம் குறித்து விசாரித்தார் ஓபிஎஸ். இதனையடுத்து மாலை 4.30 மணி அளவில் பெரியகுளத்துக்கு சாலை மார்க்கமாக காரில் ஓபிஎஸ் பயணம் மேற்கொண்டார்.
செல்வாக்கு வெள்ளோட்டமோ?
ஓபிஎஸ்-ன் இந்த திடீர் கொங்கு மண்டல விசிட்தான் இப்போது அதிமுகவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமக்கும் எடப்பாடியார் கோட்டையில் செல்வாக்கு இருக்கிறது; ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே ஓபிஎஸ் இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டாரோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.