அந்த 7 பேர் மட்டும் தான் தமிழர்களா..? சிறையில் உள்ள மற்றவர்கள் தமிழர்கள் அல்லவா..? -கே.எஸ்.அழகிரி
கோவை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோருபவர்கள், சிறையில் உள்ள மற்ற தமிழர்களையும் விடுவிக்க கோராதது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
மேலும், கொலையாளிகளுக்கு தமிழன் என ஏன் பெயர் வைக்கிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்து விட்டு எரிந்த தீ - நாசமான 5 ஆம்னி பஸ்கள்
சுற்றுப்பயணம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடந்த புதன்கிழமை அன்று திருப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார் கே.எஸ்.அழகிரி. கடந்த 3 நாட்களாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் உள்ளூர் நிர்வாகிகளை சந்தித்துப் பேசி தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்கினார்.
கொலையாளிகள்
அந்த வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, வரும் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வெல்வது உறுதி எனக் கூறினார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கொலையாளிகள் விடுதலைக்கு தமிழன் என பெயர் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
எல்லோரும் தமிழர்
தமிழகச் சிறைச்சாலைகளில் அந்த 7 பேர் மட்டும் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்றும் மற்ற எந்த தமிழருமே சிறையில் இல்லையா எனவும் கே.எஸ்.அழகிரி வினவினார். தமிழர்கள் என்றால் எல்லோரும் தமிழர்கள் தான், அதிலென்ன அந்த 7 பேர் விடுதலைக்கு மட்டும் குரல் கொடுப்பது என்றும் ஒட்டுமொத்தமாக எந்த தமிழரையும் சிறையில் வைக்காமல் விடுதலை செய்யவேண்டும் என குரல் கொடுக்க வேண்டியது தானே எனத் தெரிவித்தார்.
அமைதி காக்கவும்
உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறையிருப்பவர்கள் சிறையில் 10 வருடத்தை கழித்த அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி குரல் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என அமைதிகாக்க வேண்டும் எனக் கூறினார். இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் சோனியாகாந்தி குடும்பத்தினரே ஆட்சேபனை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.