சீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என எண்ண வேண்டாம்.. ஒரு காலமும் அது நடக்காது.. K.s.அழகிரி மெசேஜ்..!
கோவை: சட்டமன்றத் தேர்தல் சீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என யாரும் எண்ண வேண்டாம் என்றும் அது ஒரு காலமும் நடைபெறாது எனவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை கருமத்தாம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி இதனைக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் சூழலில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ள இந்த கருத்து யாரை மனதில் வைத்து என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏர் கலப்பை பேரணி
மத்திய அரசின் விவசாயிகள் சட்டத்தை கண்டித்து கோவை கருமத்தாம்பட்டியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுக்கு சூசகமாக ஹாட் மெசேஜ் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
தேவையான சீட்
சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தலைகுனிந்து நிற்கும் என எண்ண வேண்டாம் என்றும் அது ஒரு காலமும் நடக்காது எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும், சீட் பங்கீடு விவகாரத்தில் அதிகமாகவும் கேட்கமாட்டோம், குறைவாகவும் கேட்கமாட்டோம் எனத் தெரிவித்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு தேவையான சீட்களை மட்டுமே கேட்டுப் பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாடகம் நடத்துவார்கள்
இதனிடையே நாடகம் அரங்கேற்றுவதில் அதிமுகவினர் கெட்டிக்காரர்கள் என்றும் அமித்ஷாவிடம் அவர்கள் என்ன நாடகத்தை நடத்தியுள்ளார்கள் என்ற விவரம் தனக்குத் தெரியவில்லை எனவும் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். அமித்ஷாவின் வருகை அதிமுக தலைமைக்கு பயத்தை கொடுத்துள்ளதாகவும் அதனால் தான் விமான நிலையத்திற்கெ சென்று வரவேற்பு கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
மாறுபட்ட கருத்து
திமுக கூட்டணியில் சீட் பேரம் பேசமாட்டோம் என கடந்த வாரம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்திருந்த நிலையில், யாருக்கும் தலைகுனியமாட்டோம் என இந்த வாரம் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். திமுகவை மனதில் வைத்தே கே.எஸ்.அழகிரியிடம் இருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.