விடுய்யா என்னை.. டாக்டர் இங்க வரணும்.. நான் வர மாட்டேன்.. இங்கேயே சாகறேன்.. டிராபிக் ராமசாமி ஆவேசம்
அதிமுக அலுவலகம் முன்பு டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video
கோவை: "விடுய்யா என்னை.. நான் வர மாட்டேன்.. இங்கேயே சாகறேன்.. " என்று பிளக்ஸ் பேனருக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் செய்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.
எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதோ அதற்கு எதிராக போராடி வருபவர் டிராபிக் ராமசாமி.
அது மட்டுமில்லை, தமிழ்நாட்டில் எங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அதனை உள்ளே நுழைந்து அதை சீர்படுத்துவதுதான் டிராபிக் ராமசாமியின் வழக்கம். அதனால்தான் இந்த டிராபிக் என்ற பெயரே அவருக்கு கிடைத்தது. இவர் தொடுத்த பல பொதுநல மனுக்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்மீது தனி மரியாதையும் வைத்திருக்கிறது.
அதிமுக ஆபீஸ்
இந்நிலையில், கோவை அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக மாநகர் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்காக அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகை முன்பாக நிறைய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தன. இந்த விஷயம் டிராபிக் ராமசாமிக்கு தெரியவர, அதிமுக ஆபீசுக்கே வந்துவிட்டார் டிராபிக் ராமசாமி.
போக மாட்டேன்
விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கோரி அதிமுக அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை இன்று காலை தொடங்கினார். "இந்த பிளக்ஸ் பேனர்களை எல்லாம் இங்கிருந்து எடுக்கும்வரை நான் போக மாட்டேன்" என்று சொல்லி கொண்டிருந்தார்.
மயங்கினார்
அப்போது அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். ஆனால் பிளக்ஸ் பேனரை எடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று சொல்லவும் வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமி சத்தமாக பேசி பேசியே மயக்கமாகி விட்டார்.
வாக்குவாதம்
அதனால் போலீசார் உடனடியாக அவருக்கு தண்ணீர் தந்து குடிக்க சொல்லி, தங்களுடன் ஆஸ்பத்திரிக்கு வருமாறு சொன்னார்கள். ஆனால் டிராபிக் ராமசாமி தொடர்ந்து அங்கிருந்து நகர மறுத்தார். அதனால் போலீசார் அவரை தூக்க வந்தார்கள்.
தூக்கி கொண்டு ஓடினர்
அப்போது டிராபிக் ராமசாமி, "விடுய்யா என்னை.. டாக்டர் இங்க வரணும்.. நான் வர மாட்டேன்.. இங்கேயே இருந்து சாகறேன்.." என்று முரண்டு பிடிக்கவும், குண்டுக்கட்டாக அவரை தூக்கி காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு பறந்தார்கள். இதனால் அதிமுக ஆபீஸே களேபரமாகிவிட்டது.