பாலியல் தொல்லை கொடுத்தேன்...திருநங்கை கொலை வழக்கில் சிக்கிய பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்
கோவை திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் இளைஞர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியதால் ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் ர
கோவை: டிரான்ஸ் கிச்சனில் வேலை கொடுத்து வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்த திருநங்கை சங்கீதாவை கொலை செய்துள்ளார் பிரியாணி மாஸ்டர் ராஜேஷ். பாலியல் தொல்லை கொடுத்ததைப்பற்றி போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறியதால் கொன்று டிரம்மில் அடைத்து வைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ராஜேஷ்.
கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா. திருநங்கைகள் நல்வாழ்விற்காக பணியாற்றி வந்தவர் சங்கீதா. கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் மாவட்ட தலைவரான சங்கீதா, மாவட்டங்களில் உள்ள திருங்கைகளுக்கு பல்வேறு உதவிகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினார். இந்த உணவகத்தில் பணிபுரியும் அனைவரும் திருநங்கைகள் என்பதால் மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.
கடந்த வாரம் திருநங்கை சங்கீதா, உணவகத்திற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உடன் பணி புரியும் திருநங்கைகள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட, அவரை நேரில் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.
வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது தண்ணீர் நிரப்பி வைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வரவே அதை திறந்து பார்த்த திருநங்கைகள் அதிர்ச்சியடைந்தனர்.
சங்கீதா உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் ட்ரம்மில் அடைக்கப்பட்டிருந்ததால் சடலம் அழுகத்தொடங்கியிருந்தது. காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி அவரது கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கீதா நடத்திய டிரான்ஸ் கிச்சனில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்தவர். கொலைக்கான காரணம் பற்றி ராஜேசிடம் போலீசார் விசாரித்த போது, அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சமையல் அறையில் வேலை செய்தாலும் திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை அவர் போலீசில் கூற முயன்றதால் அவரை கொன்றதாகவும் கூறியுள்ளார். ராஜேஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். வேலை கொடுத்து வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்த சங்கீதாவின் உயிரை குடித்து விட்டார் வக்கிர எண்ணம் கொண்ட ராஜேஷ். திருநங்கை சங்கீதாவின் மரணம் கோவை மாவட்ட திருநங்கைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.