லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி போட்டியிடாது.. அமைச்சர் உதயகுமார் சொல்லும் 'அட' காரணம்
கோவை: வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கப்போகிறார் என்று அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று நிருபர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: அதிமுக, பாஜக, பாமக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியால் பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக, ஜெயலலிதாவின் ஆன்மா ஆசியோடு கூட்டணிகளை உடனடியாக இறுதி செய்துவிட்டு தேர்தல் பணஇயாற்ற கிளம்பிவிட்டது.
தினகரன் ஓடப்போகிறார்
அதிமுகவின், கூட்டணி அறிவிப்பு வந்ததற்குப் பிறகு, டிடிவி தினகரன் லோக்சபா தேர்தலில் நிற்கப்போவதில்லை. எங்கள் இலக்கு சட்டமன்றத் தேர்தல் தான் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார் உதயகுமார். இதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? "ஏனென்றால் தினகரன் தரப்பில் நிறுத்துவதற்கு கூட வேட்பாளர்கள் இல்லை என்று தகவல் வருகிறது." என்று கிண்டலாக தெரிவித்தார் உதயகுமார்.
தத்தளிக்கும் திமுக
மேலும் அவர் கூறியதாவது: திமுக கூட்டணி தத்தளித்துக்கொண்டு உள்ளது. இது வரை அவர்களால் கூட்டணியை அறிவிக்க முடியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு நலன்களை தமிழக அரசு, பெற்றுத் தந்துள்ளது. அதிமுக அரசு, ஆயிரம் ஆயிரம் கோடி திட்டங்களை, சத்தமில்லாமல் தமிழகத்திற்காக பெற்றுத் தந்துள்ளது.
ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம்
ஜெயலலிதாவின் ஆன்மாவின் வழிகாட்டுதலோடு இந்த கூட்டணி அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த கூட்டணிக்கு ஜெயலலிதாவே வழிகாட்டுவது போல தான் மக்கள் கருதுகிறார்கள்.
கொள்கை அளவில் மக்கள் நலன் சார்ந்து நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன்.
வைகோ இருக்கும்போது
தமிழகத்திற்கு எது நல்லதோ அந்தக் கூட்டணி அமைந்து உள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், விடுதலைப் புலிகளை வைத்து தன்னை கொல்ல முயன்றதாக, கொலைப் பழி சுமத்தி, இதற்காக வைகோ, திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதற்காக 9 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர். திமுகவை எதிர்த்து தான் தனியாக ஒரு இயக்கத்தை தொடங்கியவர் வைகோ. அவரை கூட்டணியில் வைத்துக்கொண்டு பிற கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு, திமுகவிற்கு, எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.